
-சுமித்தி தங்கராசா
தாதியர்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறும், தாதியர்களுக்கான விடுதி வசதிகள் மற்றும் நியமிக்கப்பட்ட தாதியர்களை இடமாற்றம் செய்ய வேண்டாமென்றும் கோரி, யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று வெள்ளிக்கிழமை (03) ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டனர்.
அரச தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலையில் நண்பகல் 12.00 மணிமுதல் 1.00 மணிவரை இந்த பணிப்புறக்கணிப்பில் தாதியர்கள் ஈடுபட்டனர்.
இவ்வார்ப்பாட்டம் தொடர்பில் வடமாகாண தாதிய சங்க இணைப்பாளரும் யாழ். போதனா வைத்தியசாலை அரச தாதியர் சங்க செயலாளருமான பி.ஆர்.சிவயோகம் கருத்து தெரிவிக்கையில்,
“யாழ். போதனா வைத்தியசாலையில் 1500 தாதியர்கள் தேவையாக இருக்கின்றார்கள். அதில் தற்போது 435 தாதியர்கள் கடமையாற்றி வருகின்றார்கள். யாழ். போதனா வைத்தியசாலைக்கு 150 தாதியர்களை நியமிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சுகாதார அமைச்சினால் கடந்த 01ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், யாழ். போதனா வைத்தியசாலைக்கு 70 தாதியர்களையும், மாகாண வைத்தியசாலைக்கு 46 பேரையும் நியமித்துள்ளனர்.
அத்துடன், அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில், இருவரை வேறு வைத்தியசாலைக்கு செல்ல அனுமதிக்குமாறும் தொலைநகல் மூலம் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.”