2025 ஜூன் 25, புதன்கிழமை

விவசாயத்தை நசுக்குகின்ற போர் இடம்பெறுகிறது: ஐங்கரநேசன்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 09 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


'துப்பாக்கிகள் முழங்கிய போர் முடிவுக்கு வந்த போதும், தற்போது வடமாகாண விவசாயத்தினை நசுக்குகின்ற விவசாயிகளை நலிவடையச் செய்கின்ற சத்தமில்லாத போர் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது' என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று (09) தெரிவித்தார்.

ஏழாலை, மயிலங்காடு பகுதியிலுள்ள உருளைக்கிழங்குப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் 'வயல் விழா' நிகழ்வுகள் இன்று (09) நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம்தான். மூன்று தசாப்தகாலப் போர் அந்த முதுகெலும்பை முறித்துப்போட்டுள்ளது. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழிந்த பின்பும்கூட வடக்கின் விவசாயத்தால் முன்னரைப் போன்று நிமிர்ந்து நிற்க முடியவில்லை. வடக்கின் பொருளாதாரத்தைத் தாங்கி நின்ற எமது விவசாயிகள் அவர்களது குடும்பப் பொருளாதாரத்தையே சுமக்க முடியாத அளவுக்கு திண்டாடுகிறார்கள்' என்றார்.

'விவசாயக் கடன்களின் சுமை அவர்களது பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது. தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக அவர்களில் பலர் அழுகிறார்கள். காலநிலை மாற்றங்களால் விவசாயம் பொய்த்துப் போவது மாத்திரம் இதற்கான காரணமாக இல்லை.

யாழ். மாவட்டத்தில் பயிர்ச்செய்கைக்குப் பிரசித்திபெற்ற பிரதேசம் வலி.வடக்கு பிரதேசமாகும். வளமிக்க அந்தப் பிரதேசத்தில் ஏறத்தாழ 6400 ஏக்கர்கள் அளவு இராணுவத்தினரின் பிடியிலேயே உள்ளன. 25 வருடங்களுக்கு முன்னர் அந்த மண்ணில் இருந்து வலுக்கட்டாயமாக விரட்டப்பட்ட அந்த மண்ணின் சொந்தக்காரர்கள் இன்னும் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும்தான் தங்கியுள்ளார்கள்.

தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி, மீளவும் பயிர்ச்செய்து வாழ்வதற்கு என்று அவர்கள் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தியும் அரசாங்கம் கண்டுகொள்வதாகவில்லை. ஆனால், எமது மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட நிலத்தில் இராணுவம் பயிர் செய்கிறது. அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வருகிறது. யாருக்கும் அவர்கள் குத்தகை கொடுக்கவேண்டியதில்லை.
எல்லாமே அவர்களுக்கு இலவசமாகக் கிடைப்பதால், குறைந்த விலையில் அவர்கள் தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்கிறார்கள். இந்தச் சந்தைப் போட்டியால், உற்பத்திகளை உரியவிலைக்கு விற்க முடியாமல் எமது விவசாயிகள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்' என்றும் அவர் கூறினார்.

'பொதுமக்களின் விளை நிலங்கள் மாத்திரம் அல்ல, எமது வடமாகாண விவசாய அமைச்சின் சொத்துகள்கூட படையினர் வசமுள்ளன. கிளிநொச்சி வட்டக்கச்சியில் விதை உற்பத்திப் பண்ணை, இரணைமடுச் சந்தியில் சேவைக்காலப் பயிற்சி நிலையம், வவுனியா கனராயன்குளத்தில் தாய்த்தாவரப் பண்ணை, மன்னாரில் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் என்று ஏறத்தாழ 425 ஏக்கர்கள் பரப்பளவு இராணுவத்திடம்தான் உள்ளது. இந்த நிலையில் விவசாயம் தொடர்பான ஆய்வுகளை நாம் எங்கே மேற்கொள்வது? விவசாயப் போதனாசிரியர்களுக்கான பயிற்சிகளை எங்கே வழங்குவது?

இவை மாத்திரமல்ல, எமது பிரதேசத்தில் என்ன பயிர்களை நாம் பயிரிட வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமைகூட எம்மிடம் இல்லை. அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் கரும்புச் செய்கைக்கென 71 ஆயிரத்து 716 ஏக்கர் பரப்பளவு நிலத்தைச் சுவீகரிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

போர்க்காலத்தில் சீனி இல்லாமல் அல்லது சீனிக்குப் பதிலாகப் பனங்கட்டியுடன் தேநீர் அருந்திய தமிழர்களுக்கு இந்தக் கரும்பு உற்பத்தி இனிப்பான செய்தியாக இருக்கும் என்று சிலவேளை அரசாங்கம் நினைக்கக் கூடும். ஆனால், எந்த விதத்திலும் இதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

கரும்பு பயிர்ச் செய்கை பெருமளவுக்குத் தண்ணீர் தேவைப்படுகின்ற ஒரு பயிர். ஒரு கிலோகிராம் சீனியை உற்பத்தி செய்வதற்கு ஏறத்தாழ மூவாயிரம் இலீற்றர் தண்ணீர் செலவாகிறது. ஏற்கனவே நீர்ப்பற்றாக்குறையை அனுபவித்துக் கொண்டிருக்கும் வடக்கில் கரும்புச் செய்கையை அரசு மேற்கொள்ள முயல்வது பலத்த சந்தேகத்தை எமக்கு ஏற்படுத்துகிறது.

எமது உணவுப் பயிர்களின் நிலத்தை ஆலைப்பயிர்களுக்கென்று விழுங்குவதன் மூலம் உணவுக்காக வடக்குத் தமிழர்கள் எப்போதும் தன்னையே சார்ந்திருக்க வேண்டும் என்று அரசு நினைப்பதாகவே நாம் கருதுகிறோம். அத்தோடு எமது நிலங்களைக் கையகப்படுத்தும் அரசின் ஒரு நிகழ்ச்சி நிரலாகவுமே இதனைக் கருதுகிறோம். எமது கடந்தகாலப் படிப்பினைகள் இவ்வாறுதான் நினைக்க வைக்கின்றன' என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், 'போருக்குப் பின்னர் 'ஒரே நாடு ஒரே மக்கள்| என்று அரசாங்கம் உரக்கக் கூறிவருகிறது. உண்மையில் அப்படி இல்லை. தமிழர்கள் நாங்கள் சிங்களச் சகோதரர்களிடமிருந்து பேசும் மொழியால், வாழும் இடத்தால், கைக்கொள்ளும் பண்பாட்டால் வேறுபட்டவர்கள் என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதன் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கு நீதியான, நிலையான அரசியற் தீர்வை வழங்கினால் மாத்திரமே விவசாயத்தில் மாத்திரமல்ல எல்லாத் துறைகளிலும் நிலைத்த அபிவிருத்தி சாத்தியமாகும். போருக்கு முன்பு யாழ்.மாவட்டம் அதிக அளவில் உருளைக்கிழங்குப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டிருந்தது. எமது விவசாயிகள் உருளைக்கிழங்கால் அதிகம் சம்பாதித்தார்கள். ஆனால், இன்று வெறுமனே 200 ஏக்கர் பரப்பளவில் 160 மெற்றிக் தொன்கள் விதை கிழங்குகள் நடுகை செய்யப்பட்டுள்ளன. இதில் 132 மெற்றிக் தொன்களை இலங்கை அரசாங்கம் இறக்குமதி செய்து மானிய விலையில் எமக்குத் தந்து உதவியுள்ளது.

இதன் மொத்தப் பெறுமதி 33 மில்லியன் ரூபாய்கள். இதில் அரைவாசியை அதாவது 16.5 மில்லியன் ரூபாய்களை மத்திய அரசு பொறுப்பேற்க மீதி அரைவாசியை எமது விவசாயிகள் செலுத்திப் பெற்றுக்கொண்டார்கள். வருங்காலத்தில் உருளைக் கிழங்குச் செய்கையில் தன்னிறைவு காண இங்கே வருகை தந்திருக்கும் மத்திய அரசின் பிரதிநிதிகள் தங்கள் ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

வடமாகாண சபை அமைக்கப்பட்டதற்குப் பிறகு மத்திய விவசாய அமைச்சின் பிரதிநிதிகளை நான் சந்திக்கும் முதலாவது நிகழ்;ச்சி இது. அந்த வகையில், அவர்களுக்கும் சில விடயங்களை இந்த நிகழ்ச்சியின்போது நான் தெரியப்படுத்த விரும்புகிறேன். 'ஒரே நாடு ஒரே மக்கள்' என்ற அரசின் கோஷம் எவ்வளவு பொருத்தமற்றது என்பதற்கு உதாரணமாக, இந்த நிகழ்ச்சியின் மையப் பொருளாக அமைந்திருக்கும் உருளைக்கிழங்கு தொடர்பான ஒரு வரலாற்று உண்மையை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அயர்லாந்து மக்கள் உணவில் பல்வகைத் தன்மையைக் கடைப்பிடிக்காமல் உருளைக் கிழங்குகளையே ஒரே உணவாக நம்பி வாழ்ந்தார்கள். ஒரு நாளில் ஒருவர் 4.5 கிலோ கிராம் உருளைக்கிழங்குகளை சாப்பிடும் அளவுக்கு உருளைக்கிழங்குகளையே தனித்த உணவாகப் பயன்படுத்தினார்கள்.

1845ஆம் ஆண்டில் உருளைக்கிழங்குச் செடியில் ஏற்பட்ட பின்வெளிறல் நோயால் உருளைக்கிழங்குகளின் உற்பத்தி வெகுவாகக் குறைய பட்டினியாலும் போசாக்கின்மையாலும் ஏறத்தாழ ஒரு மில்லியன் பேர் இறந்து போனார்கள். இதற்கும் அதிகமான மக்கள் ஏதிலிகளாக இடம்பெயர்ந்தார்கள். 160 ஆண்டுகள் கழித்து 2006ஆம் ஆண்டுதான் அயர்லாந்து சனத் தொகையில் தன் பழைய நிலைக்குத் திரும்பியது.

உணவில் பல்வகைமை எவ்வாறு இன்றியமையாததோ அதே போன்றுதான் ஒரு தேசத்தின் இருப்புக்கும் அங்குவாழும் இனங்களின் பல்வகைமையைப் பேணுவது அவசியமானது.இலங்கைத் தீவின் நிலையான அமைதிக்கும் அபிவிருத்திக்கும் இனங்களுக்கிடையேயான பல்வகைமையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வது இன்றியமையாதது' என ஐங்கரநேசன் மேலும் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மத்திய விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகள், உருளைக்கிழங்குச் செய்கையாளர்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .