2025 ஜூன் 25, புதன்கிழமை

வலி. மேற்கில் மீன்சந்தை அமைக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஜனவரி 10 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். வலி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் மீன் சந்தை ஒன்று அமைப்பதற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளதாக வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் இன்று (10) தெரிவித்தார்.

வலி.மேற்கு பிரதேச சபையின்  சங்கானை சந்தையிலிருந்து பெறப்பட்ட வருமானத்திலிருந்தும் நெல்சிப் திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியிலும் இந்த மீன்சந்தை சங்கானை பிரதேச செயலகத்தின் பின்னாலுள்ள காணியில் அமைக்கப்படவுள்ளது.

சங்கானை பிரதேச சபையின் மீன்சந்தை தற்போது வலி.மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்னாலுள்ள கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இதன் அருகில் இந்து ஆலயம், கடைத்தொகுதிகள் மற்றும் பிரதேச சபை நூலகம் என்பன அமைந்துள்ளன.

அத்துடன், போக்குவரத்து நெருக்கடி காணப்படுவதுடன் வாகனங்களை நிறுத்துவதற்கு போதியளவு இடவசதிகளும் இல்லையெனவும் இதனால் அச்சந்தையினை வேறு இடத்திற்கு மாற்றுமாறு  வலி.மேற்கு பிரதேச சபை தவிசாளருக்கு பொது அமைப்புக்களால் கடந்த டிசெம்பர் மாதம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பொதுமக்களினதும், பொது அமைப்புக்களினதும் விருப்பு வெறுப்புக்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக பிரதேச சபை தவிசாளர் தலைமையில் கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி சங்கானை பிரதேச சபையின் வடக்கம்பராய் கலாசார மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் சங்கானை பிரதேச செயலகத்தின் பின்புற பகுதியிலுள்ள காணியை கொள்வனவு செய்து அதில் புதிய சந்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (08) மீன் சந்தைக்கட்டிடம் அமைக்கப்படவுள்ள காணியினை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்தரை ஐங்கரநேசன், வலி. மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், வலி.மேற்கு பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், சங்கானை பிரதேச செயலர் சோதிநாதன், சங்கானைப் பகுதி பொது அமைப்புகள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.

மேற்படி மீன்சந்தையினை அமைப்பதற்கு அண்ணளவாக 35 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான நிதி தேவைப்படுகின்றது. இருந்தும் தற்போது நெல்சிப் திட்டத்தின் மூலம் 32.585 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது. மிகுதி நிதியினை சந்தையின் வருமானங்களிலிருந்து திரட்டவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .