2025 ஜூன் 25, புதன்கிழமை

மன்னார் மனித புதைகுழி, சர்வதேச விசாரணை வேண்டும்: த.தே.ம.மு

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனிதப்புதைகுழி தொடர்பில் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசியக் மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மண்டை ஓடுகளில் துவாரங்கள் இருப்பதுடன், இவற்றில் சிறுவர்களுடைய நான்கு மண்டை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்கப்பட்ட மனித எச்சங்களில் காணப்படும் மனிதப் பற்கள் 6 வயது குழந்தைகளுடையதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. 

குறித்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் 1990 ஆம் ஆண்டிலிருந்து இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவும், இராணுவப் பிரிவு ஒன்றின் கட்டளை தலைமையகமாகவும் இருந்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே, இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள் என்பன கடந்த காலத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமற்போன தமிழ் மக்களுடையது என்றே நாம் சந்தேகிக்கின்றோம்.

ஆயுதம் தரிக்க முடியாத சிறுவர்களும் கொல்லப்பட்டிருப்பதானது போராளிகள் என்பதற்கும் அப்பால் ஒரு இனத்தின் இருப்பினை ஒட்டுமொத்தமாக அழிக்கின்ற எண்ணத்தினை கொலையாளிகள் கொண்டிருந்துள்ளமையை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. எனவே இது அப்பட்டமான இனப்படுகொலையின் ஒரு அங்கமாகும்.   

கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களாக இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

எனவே, சர்வதேச சமூகமானது யுத்தம் நடைபெற்ற இறுதி மூன்று ஆண்டுகளில் மட்டும் நடைபெற்ற போர்க்குற்றங்களிற்கு விசாரணையை மட்டுப்படுத்திக் கொள்ளாது இலங்கையில் இருந்து பிரித்தானியர்கள் வெளியேறிய நாள் தொடக்கம் இன்று வரை நடைபெற்ற, நடைபெற்று வருகின்ற இனப்படுகொலை தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை நடத்த முன்வர வேண்டும்.

இம் மனித புதைகுழி தொடர்பாக இலங்கை அரசு மேற்கொள்ளும் எந்தவொரு விசாரணையும் உண்மையை வெளிக்கொண்டுவந்து குற்றவாளிகளை தண்டிப்பதற்கு வழிவகுக்காது. கடந்த காலத்தில் செம்மணி புதைகுழி விசாரணைகள் நீதிபதி ஒருவரது முன்னிலையில் இடம்பெற்றபோதும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதுடன் அக்கொலையுடன் தொடர்புடையவர்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை.

எனவே, தற்போது மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி தொடர்பாகவும் இதுவரை தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பாகவும் ஓர் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சர்வதேச சமூகத்திடம் கோருகின்றது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து  திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் குடிநீர் விநியோக திட்டப் பணியில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குழி தோண்டியபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவ்விடத்தில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல் வைத்தியரட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த மனிதப் புதைகுழி இதுவரை ஆறு தடவைகள் தோண்டப்பட்டன. அதிலிருந்து 32 மண்டை ஓடுகளும் மனித எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன என்பதுடன் குறித்த புதைகுழி எதிர்வரும் 16 ஆம் திகதி தோண்டப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .