2025 ஜூன் 25, புதன்கிழமை

ஐ.நா தீர்மானத்திற்கு சர்வதேசத்திடம் ஆதரவு கோருவோம்: த.தே.கூ

Kogilavani   / 2014 ஜனவரி 11 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

'ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு  சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வெள்ளிக்கிழமை (10) யாழில் நடைபெற்ற தமிழாராட்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நாற்பதாவது நினைவு தினத்தில் தெரிவித்தார்.

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்.முற்றவெளி திறந்த வெளியரங்கில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் அமைந்துள்ள நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தமிழராட்சி மாநாட்டின் சம்பவங்கள் இன்றும் எம் கண்முண்னே இருக்கின்றது. இதேபோன்று இதற்குப் பின்னரான தற்போதைய நிலையிலும் எத்தனையோ பல துன்ப, துயரங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

'இலங்கையில்  யுத்தம் முடிவடைந்து, ஒரே நாடு ஒரே மக்கள்' என அரசாங்கம் கூறி வருகின்ற நிலையில், தமிழினத்தின் அடையாளங்களை அழித்து இருப்பை கேள்விக்குறியாக்குகின்ற நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையை நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்.

1974, 1981, 1984  ஆண்டுகளில் நடைபெற்ற கலவரத்திற்குப் பின்னர் மிகப்பெரிய பேரழிவினால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடு  மனித உரிமை ஆர்வலர்கள் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கை மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக எமது மக்கள் பல வழிகளிலும் நடத்திய போராட்டங்கள் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் பல இலட்சக்கணக்கானோரை நாம் இழந்திருக்கின்றோம்.
'இந்த நாட்டின் ஆட்சியிலிருக்கின்ற அரசாங்கங்கள் இவ்வாறு படுகொலை செய்தும் பல ஆயிரக் கணக்கானோரை கடத்தியும் இருக்கின்றது' என இன்று அரசிற்கு எதிராக போர்க்குற்றம் சுமத்தப்பட்டு அதனை விசாரிக்க வேண்டுமென சர்வதேசம் வலுவானதொரு கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இந்நிலையில் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையில் எடுக்கவுள்ள தீர்மானங்களில் இந்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவுள்ளன.

இம்முறை நடைபெறவுள்ள மனித உரிமை கூட்டத் தொடரிலும் இங்கு இடம்பெற்ற போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணையை கோருகின்றோம்.

குறிப்பாக நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று nஐனிவாவில் இம்முறையும் கொண்டு வரப்படவுள்ள அந்தப் பிரேரணை வெற்றி பெறுவதற்கு ஆதரவு வழங்க வேண்டுமென சர்வதேச நாடுகளைக் கோரி வருகின்றோம்.

ஏனெனில் இங்கு கடந்த 1974 ஆம் ஆண்டு மட்டுமல்ல தொடர்ந்து காலங்காலமாக இவ்வாறான சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு நீதி கிடைக்கவில்லை. இங்கு எந்தக்காலத்திலும் நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை இல்லை.

இந்நிலையில் தற்போதும் எமது இனத்தினைப் பூண்டோடு அழிக்கின்ற நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதற்கு தீர்க்கமான விசாரணைகள் நடத்துமொன்றோ அல்லது இனத்தின் விடுதலைக்கான தீர்வையோ இந்த அரசாங்கம்  கொடுக்குமென்ற நம்பிக்கையும் இல்லை.

சர்வதேச ரீதியாக நாடொன்றில் இழைக்கப்படுகின்ற போர்க்குற்றங்களுக்கு எதிராக தீர்மானம் எடுப்பதற்கு நீண்ட காலங்கள் எடுக்கிறது. ஆனால் இங்கு அவ்வாறில்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஏனெனில் எமது இனத்தை அழிக்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே எமது இனத்தின்  அடையாளங்களை அழிக்கின்ற அரசின் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சர்வதேசம் குறிப்பாக ஐ.நா.உதவ வேண்டும என வேண்டுகோள் விடுக்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .