2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை உடன் நிறுத்தவும் : எமிலியாம்பிள்ளை

Kanagaraj   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்துமாறும், நிறுத்தாவிடின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் உப தலைவர் அ.எமிலியாம்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட கடற்றொழில் சங்க சமாச சம்மேளனத்தின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற மாதாந்த கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகள் 18 இருக்கின்றன. அந்தவகையில், யாழ். மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகள் நீடிக்குமாயின், கடல் வளங்கள் அழிவடைந்து போவதுடன், இதனால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

கடல்வளத்தினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்ற காரணத்தினால், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை தடைசெய்யும் நோக்கத்துடன், இன்றைய கலந்துரையாடலின் போது, புதிதாக 9 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு யாழ். மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை பயன்படுத்துபவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் மன்னார் மற்றும் ஏனைய பகுதியில் இருந்து வடபகுதிக்கு தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறினார்.

எந்த பகுதி மீனவர்களாயிருந்தாலும், அவர்கள் அரசியல் பின்புலமுள்ளவர்களாயினும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறினார்.

கடல் வளத்தினை பாதுகாக்கும் நோக்கத்துடன், யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினர், கடற்படையினர், பொலிஸார் ஆகியோர் ஒத்துழைப்புக்கான கலந்துரையாடல் ஒன்றினை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் உபதலைவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .