2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

புலோலியில் ஞாயிறன்று கோபிதாஸின் இறுதிகிரியை

Kogilavani   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன், எஸ்.ஜெகநாதன்

மகஸீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த பிரித்தானிய குடியுரிமை பெற்ற தமிழ் அரசியல் கைதியான விசுவலிங்கம் கோபிதாஸின் (43) இறுதி கிரியைகள் நீதிமன்ற உத்தரவிற்கமைய எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02)  வடமராட்சி புலோலி வடக்கிலுள்ள அவரது சொந்த இல்லத்தில் நடைபெறவுள்ளது.

கோபிதாஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை வந்தபோது, விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக பிரித்தானியாவில் நிதிசேகரித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து 4 ஆம் மாடியில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு மகஸீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

மகஸீன் சிறைச்சாலையில் இரண்டு தடவைகள் ஏற்பட்ட கலவரத்தில் அங்கிருந்த சக கைதிகள் இவரைக் கொலைசெய்ய முற்பட்ட போதும் இவர் உயிர்தப்பியிருந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (24) திகதி சிறைச்சாலை மலசலகூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது மரணம் தொடர்பில் அவரது மனைவியின் சகோதரன் தெரிவிக்கையில்,

அவரது மனைவி மற்றும் 14, 10 வயதுடைய இரு மகள்மாரும் பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்தடைந்துள்ளனர்.  தமது தந்தை இறந்த செய்தியை மகள்மார் இருவரும் இலங்கை வரும் வரையிலும் அறிந்திருக்கவில்லை.

'எனது சகோதரியின் கணவர் இலங்கையில் பிடிபட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்ற விடயம் அவரது பிள்ளைகளுக்குத் தெரியாது. தந்தை கொழும்பில் வியாபாரம் செய்து வருகிறார் என்று கூறியே எனது சகோதரி தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார்.

தனது கணவனை விடுவிப்பதற்காக சகோதரி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டவல்லுநர்கள் உள்ளிட்ட பலரின் ஊடாக பல்வேறு  முயற்சிகளை எடுத்தபோதும் அது பலனளிக்கவில்லை. 

அவரது மூத்த மகளின் பூப்பூனித நீராட்டு விழாவிற்காக தந்தையினை விடுதலை செய்யும்படி நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம். இருந்தும் அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை' என்றார்.

இந்நிலையில், இவரது சடலம் கடந்த திங்கட்கிழமை (24) மகஸீன் சிறைச்சாலையின் மலசலக்கூடமொன்றிலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .