2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தமிழக- தாயக உறவை அறுக்கும் சூழ்ச்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது: சிவமோகன்

Kogilavani   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

'தமிழக மீனவர்களினால் எமது மக்களின் மீன்வளம் சூறையாடப்படுவதாக பூதாகாரமாக செய்திகளை வெளியிடும் இலங்கை அரசு, தொப்புள் கொடி உறவு வழி முறையாக தொடரும் தமிழக – தாயக குடும்பப்பிணைப்பை அறுத்தெறிந்து விடும் சூட்சுமமான சூழ்ச்சியில் இறங்கியுள்ளது' என வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'சீனா உள்ளிட்ட இலங்கையுடன்; நட்பு பாராட்டும் பல நாடுகள் எமது கடல் வளத்தை சூறையாடி வருவதாக ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் எமது மீனவர்கள் குற்றம் தெரிவிக்கின்றனர். ஆழ்கடலில் பல நாட்களாக தரித்து நின்று இராட்சத இயந்திரவலு படகுகள் மூலம் வேற்று நாட்டவர்கள் தொழிலில் ஈடுபடுவதை எம்மிடம் உறுதிப்படுத்தியும் உள்ளனர். இவ்விடயத்தில் அரச நாடாளுமன்றத்தின் அனுமதி உள்ளது என்று கூட சந்தேகம் எழுகின்றது.

இழுவை வலையை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடும் சிறு எண்ணிக்கையிலான மன்னார் மாவட்ட தமிழ் மீனவர்களுக்கு தடை விதித்திருக்கும் இந்த அரசு, தென்னிலங்கையில் தாராளமாக இழுவை வலையை வகை தொகையின்றி சிங்கள மக்கள் பாவிப்பதற்கு அனுமதித்துள்ளது.
நாயாற்று பிரதேசத்தில் தென்பகுதி மீனவர்கள் 54 பேர் மட்டுமே தொழில் செய்ய உரித்துள்ள நிலையில், 250 படகுகளுடன் 250 இற்கும்  மேற்பட்ட சிங்கள குடும்பங்களை குடியேற்றிவிட்டு எமது மக்களின் மீன்வளத்தை சூறையாடவில்லையா?

அதேவேளை நாயாற்று பிரதேசத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் கடற்தொழில் செய்து வந்த நிலையில் தற்போது நான்கே நான்கு குடும்பங்கள் தான் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு காரணம், அடிப்படை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளமையும், இறுதி யுத்தத்தில் பல தமிழ் குடும்பங்கள் இறந்து போனமையுமாகும்.

இலங்கை அரசு தமிழர் தாயக பூமியில் இன விகிதாசாரத்தை எத்தகைய முறையில் மாற்றியமைக்கின்றது என்பதற்கு இந்த ஒரே ஒரு எடுகோளே போதுமானது.

எமது மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் இதய சுத்தியில்லாத இந்த அரசு,  தென்னிலங்கையில் இருந்து மீனவர்களை இறக்குமதி செய்து எமது கடல் வளத்தை தாறுமாறாக சுரண்டிக்கொண்டு எமது மக்களின் வாழ்வாதாரம் பற்றி சிந்திப்பது போல் பாசாங்கு செய்து, இருநாட்டு மீனவர்கள் உறவில் விரிசலை உண்டு பண்ணி பகை உணர்வை வளர்க்க முனைகின்றது.

இலங்கை அரசின் இத்தகைய வஞ்சிப்பு நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு உலகமே திரண்டு வந்து நீதிகேட்டு ஜெனிவா நோக்கி வீறுநடை போடும் சூழலில், அதற்கு இந்திய தளத்திலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி இலங்கை - இந்தியா மீனவர்களுக்கிடையில் மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளிலிருந்து எமது தமிழ் மக்கள் சார்பாக கலந்துகொள்ளும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் 'நம் கையைக்கொண்டே நம் கண்ணை குத்த வைக்கும்' இலங்கை அரசின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டுவிடக் கூடாது.

கத்தியின் கூரிய விளிம்பில் நடக்க வேண்டிய சூழல் ஒன்றுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டால், மிகக்கவனமாக எப்படி நம் காலடிகளை எடுத்து வைப்போமோ அதேயளவு கவனத்துடன் செயல்படுவதுடன், இலங்கை அரசின் மிகவும் சூட்சுமமான பொறிக்குள் அகப்பட்டு நாம் மாய்ந்து விடக்கூடாது'  என அவ் அறிக்கையில்; மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .