2025 ஜூன் 28, சனிக்கிழமை

உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது

Kogilavani   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-சொர்ணகுமார் சொரூபன் ,எஸ்.கே.பிரசாத்

வர்த்தக ரீதியில் மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற யாழ்.வர்த்தகர்களின் நலன்கருதி தமிழ்த்தேசிய பண்பாட்டுப் பேரவையினரும் யாழ்.வர்த்தகர்களும் இணைந்து இன்று (03) காலை 9.30 மணி முதல் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உறுதிமொழியினைத் தொடர்ந்து மதியம் 12 மணியுடன் கைவிடப்பட்டது.

 யாழ்.மாவட்டத்திற்கு வெளியில் இருந்து வந்து தற்காலிகமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளினால் யாழ்ப்பாண வர்த்தகர்கள் வியாபாரப் பாதிப்புக்களையும், நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர் என்ற காரணங்களிற்காக இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டம் தொடர்பில்  தமிழ்த் தேசியக் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் சுவீகரன் நிசாந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
'யாழ்.மாவட்டத்திற்கு வெளியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து தற்காலிக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளினால் யாழ்ப்பாண வர்த்தகர்கள் வியாபாரப் பாதிப்புக்களையும், நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் தங்கள் வர்த்தக நிலையத்தின் மின்கட்டணம், இதர வரிகளைக் கூட செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். மேலும் வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்கள் வழங்க முடியாமல் அவர்களை பணியிலிருந்து நிறுத்தும் நிலையில் யாழ்.வர்த்தக நிலையங்கள் இருக்கின்றன.

அத்துடன், கடன் பெற்று வியாபார நிலையங்களை நடத்தும் வியாபாரிகள் தகுந்த இலாபம் கிடைக்காமையினால் கடனுக்கான வட்டியையும் கடனையும் மீளச் செலுத்த முடியாமல், நிலையங்கள் மூடப்படுகின்ற அல்லது கைமாற்றப்படுகின்ற நிலைமைகள் அதிகரிக்கின்றன. இதனால் வியாபாரிகள் பெருமளவில் தற்கொலைகளும் செய்து கொள்கின்றனர்.

இது இவ்வாறிருக்க தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு வீரசிங்கம் மண்டபத்தினை வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு யாழ்.கூட்டுறவு நிறுவனத்தினர் ஒரு மாதகாலத்திற்கு வழங்கியுள்ளமை யாழ்.வர்த்தகர்களை மேலும் அவலத்திற்குள்ளாக்கும் செயற்பாடாகும். இதனால் புத்தாண்டு வர்த்தகத்தில் யாழ்.வர்த்தகர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

அத்துடன், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் வர்த்தகர்களும் யாழ்ப்பாணத்தில் அகல கால் வைத்துள்ளனர். இவர்களை யாழ்.மாநகர சபை, கூட்டுறவு நிறுவனத்தினர் மற்றும் மாகாண அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என அவர் தெரிவித்தார்.

எனினும், இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும், வெளியிடங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு தொகையும், யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு ஒரு தொகையும் கட்டணமாக அறவிடும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாகவும் முதலமைச்சர் உறுதியளித்ததாக முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மன்மதராசா தெரிவித்தமையினையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அத்துடன், பண்டிகைக்கால விற்பனை நடவடிக்கையில் யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு இடங்களை ஒதுக்கிய பின்னர் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாநகர சபையின் கவனத்திற்கு முதலமைச்சர் கொண்டுவரவுள்ளதாக முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ்ப்பாண வர்த்தக சங்கத் தலைவர் ஜே.ஜெயசேகரம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், யாழ்ப்பாண வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .