2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தமிழ்மக்களை அரசு அடிமைகளாகவே கருதுகின்றது: ஐங்கரநேசன்

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


'தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம், அதன் பின்னர் தமிழ் மக்களைத் தான் சொன்னவற்றை மாத்திரம் செய்யவேண்டிய அடிமைகளாகவே கருதுகிறது' என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

சுழிபுரம் பாரதி கலைமன்றத்தின் 32வது ஆண்டுவிழாவும் கலையரங்க திறப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (25) சுழிபுரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

'உலகில் உயிர்களின் இருப்புக்கு இப்பல்வகைமை அத்தியாவசியமானது என்பதுதான் உயிரியல் நியதி. இப்பல்வகைமை, மொழிப்பல்வகைமை, பண்பாட்டுப்பல்வகைமை என்று எல்லாப் பல்வகைமைகளுமே இன்றியமையாதவை.

ஆனால், இலங்கை அரசு  இனப்பல்வகைமையை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லை. சகல இனங்களையும் சமத்துவமாக ஏற்றுக்கொள்ளாமல், சிங்கள மேலாதிக்கச் சிந்தனையுடனேயே தொழிற்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசாங்கம் போரில் இறந்த எங்களின் உறவுகளுக்கு எங்களை அஞ்சலி செய்யவிடாமல் தடுத்து, அஞ்சலிச் சுடர்களைக் காவல்துறையினரின் சப்பாத்துக் கால்களால் மிதித்து அணைக்கும் காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அதேசமயம், வெற்றி விழாவைக் கொண்டாடுகிறது.

போருக்குப் பிறகு தமிழ்மக்களை அடிமைகளாகக் கருதியே அரசு இத்தகைய அடக்குமுறைகளை எங்கள் மீது மேற்கொண்டுவருகிறது. கைகளில் ஆயுதங்கள் இல்லை என்பதற்காக அடக்குமுறைகளை எதிர்த்து நாம் போராடாமல் இருக்க முடியாது. ஆனால், ஜனநாயக ரீதியாகப் போராட முற்படுபவர்களையும் பயங்கரவாதத்துக்குத் துணைபோவதாகச் சொல்லிக் கைதுசெய்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  மே-18 அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்கிறார் என்பதற்காகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் விசாரணைக்கென 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டார்.

அதேபோன்று மீள்குடியேற்றத்தை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துகொண்டிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இப்படி, அரசாங்கம் இனப்பல்வகைமையை, இனச்சமத்துவத்தை நிராகரித்துச் சிங்கள மேலாதிக்கச் சிந்தனையோடு தொடர்ந்தும் தொழிற்படுமாக இருந்தால் இலங்கைத்தீவில் ஒருபோதும் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. இது மென்மேலும் இனங்களுக்கிடையிலான பகைமையை வளர்த்துச் சென்று அழிவுகளுக்கே வழிகோலும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X