2025 ஜூன் 28, சனிக்கிழமை

இரணைமடு - யாழ்ப்பாண குடிநீர்த் திட்டத்தை தாமதப்படுத்த முடியாது

Princiya Dixci   / 2015 ஜூன் 22 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இருக்கும் சர்ச்சையை வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் தீர்த்துத் தரவேண்டும் எனவும் இந்தத் திட்டத்தை மேலும் தாமதப்படுத்த இயலாது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

யாழ். சிவன் பண்ணைப் வீதியில் 282 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட யாழ் கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கட்டடத் தொகுதிகளை இன்று திங்கட்கிழமை (22) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இரணைமடுத் திட்டத்தை இன்னும் 2 வருடங்களுக்குள் நடைமுறைப்படுத்தவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கண்டிப்பாக கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதியில் குடிநீர் மாசு ஏற்பட்டுள்ளது. அப்பிரச்சினைக்கு தீர்வு எட்டவேண்டிய நிலையுள்ளது. யாழ்ப்பாண நிலத்தடி நீர் மாசுபடுவதையடுத்து, இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத்திட்டம் கொண்டுவரப்பபட்டது. இந்த திட்டத்துக்காகவே இந்தக் கட்டடங்கள் அமைக்கப்பட்டன.

கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ள போதும், நீர் வழங்கலில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் எடுப்பதற்கு அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து, தங்களுடைய தேவைக்கு மேலதிகமாகவுள்ள நீரையே திட்டத்துக்காக எடுத்துக்கொள்ளலாம் என்றும் போராட்டங்களைச் செய்கின்றனர்.

இது ஒரு சர்ச்சையாகக் காணப்படுகின்றது. அதற்கு இந்தக் குளத்தின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். கொள்ளளவு அதிகரிக்கும் செயற்றிட்டம் ஒரு புறமாக இடம்பெற்றாலும் குறித்த சர்ச்சையை இங்குள்ள அரசியல்வாதிகளே தீர்த்துத் தரவேண்டும். அவ்வாறு தந்தாலே நீர் வழங்கல் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும். இனியும் இந்தத் திட்டத்தை தாமதப்படுத்த முடியாது.

இதனைவிட உவர் நீரை நன்னீராக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. அதனையும் மேற்கொள்ள வேண்டும். திண்மக் கழிவுகளால் யாழ்ப்பாண நீர் மாசுறுவதையும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இனங்கண்டுள்ளது. யாழ். மாநகர சபைக்கு அண்மிய பகுதிகளில் திண்மக் கழிவு அகற்றும் செயற்றிட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

இது தொடர்பில் விரைவில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளோம். இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த இன்னும் மேலதிக நிதிகள் தேவையாகவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து மேலதிக நிதியைப் பெறவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .