2025 ஜூன் 26, வியாழக்கிழமை

காக்கைதீவில் வடக்கின் முதலாவது பிளாஸ்ரிக் மீள்சுழற்சி மையம்

Thipaan   / 2015 ஜூலை 11 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட காக்கைதீவில் 7.89 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள வடமாகாணத்தின் முதலாவது பிளாஸ்ரிக் மீள் சுழற்சி மையத் தொகுதிக்கான அடிக்கல்லை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வெள்ளிக்கிழமை (10) நாட்டினார்.

மனித ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கு வடமாகாணத்தில் இதுவரை ஒரு தொழிற்சாலை இல்லாமல் இருந்தது.

இதைக் கருத்திற்கொண்டே பிளாஸ்ரிக் கழிவுகள் மீள்சுழற்சி மையம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபை 5.5 மில்லியன் ரூபாயை வழங்குவதோடு, 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியில் பிளாஸ்ரிக் மீள்சுழற்சிக்கான இயந்திரத் தொகுதிகளையும் கொள்வனவு செய்து வழங்குகிறது.

யாழ். மாநகர சபை 0.79 மில்லியன் ரூபாயை வழங்க முன்வந்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஒதுக்கிய நிதியில் இருந்து முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையை சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், யாழ். மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதனிடம் கையளித்துள்ளார்.

யாழ். மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவத்தின் திட்ட இயக்குநர் பந்துல சரத்குமார, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண பிரதிப் பணிப்பாளர் விஐிதா சத்தியகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

நான்கு மாதங்களில் பிளாஸ்ரிக் மீள்சுழற்சி மையத்தின் கட்டட நிர்மாணப் பணிகள் யாவும் முடிவடைந்து மீள்சுழற்சிப் பணிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .