2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விபத்தில் சிறுமி பலி; பெற்றோரும் சகோதரியும் காயம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முஹம்மது முஸப்பிர்

ஆனமடு-  சிலாபம் வீதியின் சங்கட்டிக்குளம் எனும் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (18) இரவு இடம்பெற்ற விபத்தில் 05 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதோடு, அச்சிறுமியின் பெற்றோர் மற்றும் ஒரு வயதுடைய சகோதரி ஆகியோர் பலத்த காயங்களுக்குள்ளாகி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆனமடுப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 8.15 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் ஆனமடு முதலக்குளிப் பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம். தெவ்மி சௌபாக்கியா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சிலாபத்திலிருந்து ஆனமடு நோக்கி வந்து கொண்டிருந்த கெப் ரக வாகனமும் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த  மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரவித்தனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த உயிரிழந்த சிறுமி, சிறுமியின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர்  உடனடியாக அவ்விடத்திலிருந்து ஆனமடு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டடுள்ளனர். எனினும், அங்கு இச்சிறுமி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் பலத்த காயங்களுக்கான உயிரிழந்த சிறுமியின் பெற்றோரான எச். எம். லக்ஷ்மன் ஜயலத் (வயது 44) மற்றும் எச். எம். தமயந்தி ராஜகருணா (வயது 32) மற்றும் சகோதரி ஆகியோரின் நிலை மோசமாக இருந்ததால் அவ்விரும் ஆனமடு வைத்தியசாலையிலிருந்து புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதியான ஆனமடு சமகிஉதாகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர், ஆனமடுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆனமடுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X