-எம்.எஸ்.முஸப்பிர்
புத்தளம் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் கே.எம்.சரத் குமாரவின் பணி தற்காலிகமாக நேற்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. நத்தார் தினமான நேற்று முன்தினம் அநுராதபுரம் வீதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற வேளை இடம்பெற்ற விபத்தில் மூன்றரை வயதுச் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து குறித்த உப பொலிஸ் பரிசோதகர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் கைதுசெய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் நேற்றுமுன்தினம் புத்தளம் பதில் நீதவான் முஹம்மட் இக்பால் முன்னிலையில் ஆஜர்படுத்தியதில் நேற்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும், நீதவானுமாகிய செல்வி பாரதி விஜேரத்ன உத்தரவிட்டார்.
இதனையடுத்து நேற்று மாலை அவர் புத்தளம் உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் தற்காலிகமானப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.