2025 மே 09, வெள்ளிக்கிழமை

'பிரிவினைவாத சிந்தனைகளை தோற்கடித்து, புதிய சிந்தனைகளை அடித்தளமாக்குவோம்'

Gavitha   / 2015 மார்ச் 18 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவேண்டும். குறிப்பாக ஏனைய தமிழ்த் தேசிய தலைவர்களையும் உள்ளடக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்வதன் அவசியத்தை, அவர்களிடத்தில் கூறியிருக்கின்றேன் என மன்னார் மாவட்ட பேராயர் வண. பிதா ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் நேற்று (17)  கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'இது தொடர்பாக நான் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தேன். அதுபோல தற்போது தமிழ்த் தலைவர்கள் அவ்விடயத்தை முன்னெடுக்க வேண்டும் எனக்கோருகின்றேன். குறிப்பாக தமிழர்கள் செறிவாக வாழும் எட்டு மாவட்டங்களில் உள்ள அரசியல் பிரநிதிகள் ஒன்றுபட வேண்டியது மிக முக்கியமானதாகும்.

அனைத்து தமிழ் தரப்புக்களும் ஒன்றுபட்ட ஒரு காத்திரமான பலமிக்க அரசியல் கட்சியாக இருப்பது, சிங்கள அரசியல் சக்திகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். அவ்வாறில்லாமல் பிரிந்து தனித்தனியாக செயற்படுவதென்பது, எமது எதிர்காலத்தை பலவீனப்படுத்துவதாக அமைந்து விடும். ஆகவே, அரசியல் கட்சியாக பதிவு செய்வது என்பது மிகவும் முக்கிய விடயமொன்று என்பதுடன்,  இவ்விடயத்தை வலியுறுத்தியும் இச்சிந்தனையை வலுப்படுத்தியும் ஊடகவியலாளர்கள் செயற்படவேண்டும்.

தமிழ் மக்கள் யார்? அவர்கள் எந்த விடயங்களை கோருகின்றார்கள். அவர்களின் வரலாற்றுப் பின்னணி என்ன? அவர்களின் மொழியின் செழுமை என்ன? போன்ற விடயங்களை, சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும். அதற்காக இன்று ஊடகமொன்று காணப்படாதிருக்கின்றது. அவ்வாறான ஊடகமொன்று உருவாக்கப்பட்டு சிங்கள மக்கள் மத்தியில் அக்கருத்துக்கள் கொண்டு செல்லப்படவேண்டும். அதற்கான கருமங்களை ஊடகவியலாளர்கள் முன்னெடுக்க வேண்டும். தமிழர்கள் விடயத்தில் அறியாமையில் இருப்பவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும்.

சுதந்திரமடைந்த காலம் முதல் தற்போது வரையில் தமிழ் மக்களை குழித்தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுகின்றன.
தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில், தமது உயிரைக் கூட தியாகம் செய்யுமளவுக்கு துணிந்து உயிரைப் பணயம் வைத்தவர்கள் ஊடகவியாளர்கள் ஆவர். அவர்களின் தியாகம் தமிழ் மக்களால் என்றும் மறக்கமுடியாதவொரு விடயமாகும். ஆயுதமேந்திப் போராடியவர்கள் ஒரு புறமிருக்க, மறுபுறத்தில் பேனாமுனையால் ஊடகவியலாளர்கள் போராடினார்கள்' என்று கூறினார்.

தமிழ் மொழி என்பது செம்மொழியாகும்

'இவ்வுலகத்தில் தமிழ் மொழிக்குரிய சிறப்பை சீன மொழி மட்டுமே கொண்டிருக்கின்றது. அதேநேரம் சமஸ்கிரதம் போன்ற பல பண்டைய மொழிகள் காலப்போக்கில் மருகியிருக்கின்றன. இருப்பினும் தமிழ் மொழியின் தன்மையும் செழுமையும் இன்னும் அழியாது இருக்கின்றது.  அதற்காக தலைநகரில் ஒரு சங்கமமைத்து செயற்பாடுகளை முன்னெடுப்பது மிகப் சிறப்பானதொரு செயற்பாடாகும்.

அதேநேரம் முஸ்லிம் சமூகத்தினரும் தமிழ் மொழியை வளர்ப்பதில் பங்காளர்களாக இருக்கின்றார்கள். ஆகவே, தமிழ் மொழியை பாதுகாத்து வளர்க்கும் செயற்பாடுகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ,  அங்கெல்லாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் மொழி வளர்ப்பில் ஈடுபடவேண்டும். இதற்காக ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

தமிழர்கள் சிதறிடிக்கப்பட்டுள்ளார்கள். எமக்குள் சாதி, மதம், சமூகம் என பல பிரிவினைகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் கைவிடப்பட்டு அனைத்து மக்களும் ஒன்றுபடவேண்டும். மனிதர்களை மனிதர்கள் மதிக்க வேண்டும். எல்லா சமூகங்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதனை விடுத்து உரிமைக்காக போராடுவதில் எந்தவிதமான பலனுமில்லை.

ஆகவே, பிரிவினைவாதங்களை நோக்கிய பழமைவாயந்த சிந்தனைகள் அனைத்தும் தோற்கடிக்கப்படவேண்டும். புதிய சிந்தனைகள் அடித்தளமிட்டு கட்டியெழுப்பபடவேண்டும். இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நடவடிக்கைகளை தமிழ் ஊடகங்கள் முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் சிறுபான்மை இனமல்ல. அவ்வாறு கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அது தவறானதும் கூட. 1995ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவிக்கு வந்தபோது, அவரின் முன்னோர்கள் விட்டதவறுகளை விடவேண்டாம் என்ற கோரிக்கையொன்றை விடுத்து, கடிதமொன்றை எழுதியிருந்தேன். அதேநேரம் நாம் வரலாற்று ரீதியான ஒரு இனம். எமக்கான அடையாளங்கள் இருக்கின்றன. ஆகவே, நாம் தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை அக்கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன். இருப்பினும் அவ்விடயங்கள் தொடர்பில் கூடியளவில் கவனம் கொள்ளப்பட்டிருக்கவில்லை' என்றார்.

மேலும் தெரிவித்த அவர்,

'போர் முன்னெடுக்கப்பட்டபோது, முதற்கட்டமாக உண்மை கொல்லப்பட்டது, புதைக்கப்பட்டது. உண்மை என்பது ஒளியாகும். அதன் பிரகாரம் பயணிப்பவரால் மாத்திரமே நேராக செல்லமுடியும். இல்லையேல் குறுகிய வட்டத்துக்குள்ளே மீண்டும் மீண்டும் சுற்றவேண்டியிருக்கும். யுத்தத்தின் போது, இடம்பெயர்ந்து வந்திருந்த மக்கள் மீது குண்டுகள் வீழ்ந்திருந்ததுடன், அவ்விடத்தில் பாரிய கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அவ்விடத்துக்கு, நானே முதலில் சென்றிருந்தேன். அதன்போது பாதுகாப்பு தரப்பு ஊடகத்தில் புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதாகவும் ஆயுதக்கிடங்கு தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுக்கொண்டிருந்தது.

அத்தருணத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியிருந்தேன். நாட்டின் தலைவராக மக்களுக்கு வழிகாட்டவேண்டிய உங்களை, அருகில் இருக்கும் உதவியாளர்கள் தான் இருளில் வைத்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அத்துடன் யதார்த்த நிலைமைகள் தொடர்பில் தங்களுடைய ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதால், அவர்கள் மூலம் உண்மையை அறிந்துகொள்ள முடியும் எனவும் வலியுறுத்தினேன்.
தமிழ் மக்களை கொன்று குவிக்கும் போர் வேண்டாம். ஒரு சமாதான நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும் என வெளிநாடுகளிடம் கோரினோம். பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என கோரினோம்.  குறிப்பாக நோர்வே பிரதமரிடம் வலியுறுத்தினோம். அதனை எழுத்து மூலமாகவும் அனுப்பி வைத்தோம். அவர் இங்கு வருகை தந்து பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டனவே தவிர நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எமது அரசியல் கருமங்கள் அனைத்துமே ஏமாற்றப்பட்டதொரு நிலைமையாகவே இருந்து வந்துள்ளது. இவ்வாறான நிலைமைகள் மாறவேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே, தமிழ் மக்கள், சிங்கள மக்கள் என அவைரும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என விரும்பினோம். அதன் அடிப்படையில் புதிய அரசாங்கம் அமைந்தது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர், தமிழ் மக்களுக்கு உரிமைகள் காணப்படுகின்றன. ஆனால் அது இங்கு இல்லை, தமிழ் நாட்டிலேயே உள்ளது எனக் கூறுகின்றார். அமெரிக்காவிலுள்ள வெள்ளையர்களை பிரித்தானியாவுக்கு செல்லுமாறு கூறமுடியுமா? அதேபோன்று அவுஸ்திரேலியாவில் உள்ளவர்களை அயர்லாந்துக்கு செல்லுமாறு கூறமுடியுமா? அவ்வாறு கூறி அவர்கள் சென்றார்களாயின், நீங்கள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியும். சமயத்தலைவர்கள் பொய்மையை முன்னெடுப்பது தவறானதாகும்' என்று தெரிவித்து அவரது உரையை நிறைவுக்கு கொண்டு வந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X