2025 மே 19, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் முதலாவது அரசாங்க முன்னரங்க அலுவலகம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜனவரி 23 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் (EU - SDDP) ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்ட நிறுவனத்தின் (UNDP ) நல்லாட்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து சேவைகளும் ஒரேஇடத்தில் பெறும் வகையிலான மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்னரங்க அலுவலகத் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.   

மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் கு.குணநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் பிரதம அதிதியாக வருகை தந்து முன்னரங்க அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.   

இந்த, மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்னரங்க அலுவலகத்தில், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் உடனடியாகத் தங்களது தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் வகையிலும் தகவல், காணி, ஓய்வூதியம், மோட்டார் போக்குவரத்து, பதிவாளர் பிரிவு, சமூக நலன், காசாளர், பொருளாதார ஆலோசனை, சான்றிதழ்கள், அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.   

இலங்கையில் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையிலான முதலாவது அரசாங்க அலுவலக முன்னரங்க அலுவலகம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

நிகழ்வில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் நல்லாட்சித்திட்ட அதிகாரி 
இரா.தனராஜ் கௌரவ அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக மாவட்ட பிரதம கணக்காளர் ச.நேசராசா, மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் ஆர்.வளர்மதி, உதவி மாவட்டச் செயலாளர் அ.நவேஸ்வரன், மாவட்ட பொறியியலாளர் தெ.சுமன், மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான திருமதி ஜெ.கணேசமூர்த்தி, அ.சுதாகரன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஜதீஸ்வரன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கு.சுபாஸ்கரன், திட்டப் பொறுப்பாளர் கு.பார்த்தீபன், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.   

1998ஆம் ஆண்டு முதல் ஐக்கியநாடுகள் அபிவிருத்தித்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வருகிறது. 

கடந்த காலங்களில் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், நல்லாட்சி தொடர்பான செயற்திட்டங்கள், கொள்கை மாற்றங்கள், அனர்த்த முகாமைத்துவச் செயற்திட்டங்கள் எனப்பல்வேறு செயற்திட்டங்கள் ஐக்கியநாடுகள் அபிவிருத்தித்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட ஐந்தாண்டு அபிவிருத்தித்திட்டத்திலும் நல்லாட்சி மேம்பாடு, உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி சார் திட்டங்கள் ஐக்கியநாடுகள் அபிவிருத்திட்டதிட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், இளைஞர் அபிவிருத்தி, பொது மக்கள் நலன் பேணல் வசதி ஏற்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X