
மெட்ரோ கொழும்பு அபிவிருத்தி திட்டம் தற்போது 50 வீதம் பூர்த்தியடைந்துள்ளதெனவும், இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 25 வீதமான பகுதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது.
213 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவியில் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், தற்போது இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில் இந்த திட்டம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்கியின் சிரேஷ்ட நகர நிபுணர் ரொசான்னா நிட்டி கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் பிரதான நகரமான கொழும்பு நகரின் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு பங்களிப்பு வழங்கி, கொழும்பு நகரில் ஏற்படும் வெள்ளம் காரணமாக ஏற்படக்கூடிய சமூக, பொருளாதார பாதிப்புகளை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. கொழும்பு நகரில் காணப்படும் ஏரிகளையும், நீரோடைகளையும் தூய்மைப்படுத்தி, அவற்றை அண்மித்து பொழுது போக்குக்கான பிரதேசங்களை அமைப்பதும் இந்த திட்டத்தினூடான நோக்கமாக அமைந்துள்ளது' என்றார்.
இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ள திட்டங்களில், பொது கழிவறைகளுக்கான கட்டடங்கள் நிர்மாணித்தல், வீதிகளுக்கு கார்ப்பட் இடல், நகர மண்டபம் மற்றும் விஹாரமஹாதேவி பூங்கா ஆகியவற்றை மறுசீரமைப்பு செய்தல், பாதசாரிகள் கடக்குமிடங்கள் அமைத்தல், LED விளக்குகள் அமைத்தல், பரந்த நடைபாதைகள் மற்றும் இருக்கை பகுதிகள் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.
பத்தேகன, பேரவாவி ஆகியவற்றை அண்மித்து இரு பூங்காக்கள் நிர்மாணிக்கப்படுவதுடன், மூன்றாவது பூங்கா காக்கை தீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.