ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களிலிருந்து அதிகளவு உதிரிப்பாகங்கள் திருடப்படுவதாகவும், இதன் காரணமாக வாகன இறக்குமதியாளர்கள் பெருமளவு பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து வாகன இறக்குமதியாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் கீர்த்தி குணவர்தன கருத்து தெரிவிக்கையில், 'கடந்த இரண்டு மாத காலமாக எமது அங்கத்தவர்களிடமிருந்து, இந்த வாகன உதிரிப்பாகங்கள் திருடப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. ரேடியோக்கள், என்ஜின் உதிரிப்பாகங்கள் போன்றன பெருமளவு திருடப்படுவதாகவும், ஹைபிரிட் ரக வாகனங்கள் பெருமளவு திருட்டுக்கு இலக்காவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வாகனங்களுடன் எவ்விதமான குறிப்புகளையும் அனுப்பி வைக்காமையால், அவற்றை பரிசீலனை செய்வதிலும் சிக்கல் நிலை காணப்படுகிறது' என்றார்.
இது குறித்து துறைமுக அதிகார சபையின் தலைமை அதிகாரி பிரியாத் விக்ரம கருத்து தெரிவிக்கையில், 'இந்த விடயம் குறித்து நான் சுமார் இரண்டு வார காலப்பகுதிக்கு முன்னர் தான் கேள்வியுற்றேன். துறைமுகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியை கண்காணிப்பதற்காக பாதுகாப்பு கமெராக்களை பொருத்துவதற்கான விலை மனுக்களையும் நாம் கோரியுள்ளோம்' என்றார்.