2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பங்குச்சந்தை, தங்கம் விலை மற்றும் நாணயமாற்று வீத நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
S&P SL 20 சுட்டி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது முதல் இது வரையில் பதிவு செய்திருந்த உயர்ந்த பெறுமதியை கடந்த வாரம் பதிவு செய்திருந்தது, மேலும் சந்தையில் தொடர்ந்தும் உயர்ந்த கொடுக்கல் வாங்கல்களை அவதானிக்க முடிந்தது. திங்கட்கிழமை சீராக்கம் காரணமாக சுட்டிகள் சரிவான பெறுமதியை பதிவு செய்திருந்த போதிலும், ஏனைய நாட்களில் சந்தை தொடர்ந்தும் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வங்கியியல், நிதி மற்றும் காப்புறுதி துறையை சேர்ந்த பங்குகள், உற்பத்தித் துறை மற்றும் உணவு, பானங்கள் மற்றும் புகையிலைத்துறை போன்றன அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7,234.92 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 4018.98 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
செப்டெம்பர் 15ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 11,230,046,024 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 62,755 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 60,147 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 2,608 ஆகவும் பதிவாகியிருந்தன. 
 
திங்கட்கிழமை
கொமர்ஷல் வங்கி, கார்சன் கம்பர்பட்ச் மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகிய பங்குகளின் மீது விலைச் சரிவு காரணமாக சுட்டிகள் சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு தப்ரோபேன் ஹோல்டிங்ஸ், சொஃப்ட்லொஜிக் கெப்பிட்டல், பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், ஹேலீஸ் மற்றும் ஏசிஎல் பிளாஸ்டிக் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் ஜனசக்தி இன்சூரன்ஸ் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. இதேவேளை, கலப்பு ஈடுபாடு என்பது பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் பான் ஏசியன் பவர் ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டு செயற்பாடுகள் என்பது குறைந்த மட்டத்தில் காணப்பட்டதுடன், பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகளை அதிகளவு விற்பனை செய்திருந்தனர்.
 
செவ்வாய்க்கிழமை
நேற்றையதினம் சீராக்கம் காரணமாக மறைபெறுமதியை பதிவு செய்திருந்ததை தொடர்ந்து, மீண்டும் நேர் பெறுமதிகளுடன் பங்குச்சந்தை நிறைவடைந்திருந்தது. கார்சன் கம்பர்பட்ச், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் நெஸ்லே லங்கா ஆகியன இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. கொமர்ஷல் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் நந்தா இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் மீது மொத்த கைமாறல்கள் பதிவாகியிருந்தன. புரள்வு பெறுமதி 2 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு என்பது சம்பத் வங்கி பங்குகளின் மீது பதிவாகியிருந்ததுடன், டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி, அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் லங்கா ஐஓசி பங்குகளின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. மேலும், ஹேலீஸ் எம்ஜிரி பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்குகளை கொள்வனவு செய்திருந்தனர்.
 
புதன்கிழமை
லயன் பிரெவரி, ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் ஆகிய பங்குகள் மீது விலை உயர்வு பதிவாகியிருந்ததன் காரணமாக சுட்டிகள் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதியும் 2.1 பில்லியனை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு என்பது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ரோயல் செரமிக்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ரேணுகா அக்ரி ஃபூட்ஸ் மற்றும் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. இதேவேளை கலப்பு ஈடுபாடு என்பது கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் வலிபல் பவர் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டிருந்ததுடன், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ரோயல் செரமிக்ஸ் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் மீது கவனம் செலுத்தியிருந்தனர்.
 
வியாழக்கிழமை
சிலோன் டொபாக்கோ கம்பனி, நெஸ்லே மற்றும் ஹேலீஸ் ஆகிய பங்குகளின் மீது விலை உயர்வுகள் பதிவாகியிருந்தன. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தன. இதேவேளை, மொத்த பங்கு கைமாறல்கள் புரள்வு பெறுமதியை 45 வீதத்தால் அதிகரித்திருந்தன் இது 2 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. சிறியளவிலான முதலீட்டாளரின் ஈடுபாடு பிசிஎச் ஹோல்டிங்ஸ், பிசி ஹவுஸ் மற்றும் ரேணுகா அக்ரி ஃபுட்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிஐசி ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் ஆகியவற்றின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது.
 
வெள்ளிக்கிழமை
புக்கிட்தாரா, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீது விலை உயர்வு பதிவாகியிருந்ததை தொடர்ந்து கொழும்பு பங்குச்சந்தை நேர் பெறுமதிகளுடன் நிறைவடைந்திருந்தது. புரள்வு பெறுமதி 2.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. வங்கித்துறை என்பது உயர்ந்தளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு என்பது சிடிசன்ஸ் டிவலப்மன்ட் மீது பதிவாகியிருந்தது. இதேவேளை மொத்த கைமாறல்கள் புரள்வு பெறுமதியை 15 வீதத்தால் உயர்த்தியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், அக்சஸ் என்ஜினியரிங், கொமர்ஷல் வங்கி, DFCC வங்கி மற்றும் செலான் வங்கி ஆகியவற்றின் மீது ஈடுபாடு பதிவாகியிருந்தது.
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் பேருவல வோல்கின், சிஐசி (சாதாரண), குருவிட்ட டெக்ஸ்டைல், சிஐசி மற்றும் பிசிஎச் ஹோல்டிங்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
சுவதேஷி, எஸ்எம்பி லீசிங் (சாதாரண), ஜி.எஸ்.பினான்ஸ், அக்மி மற்றும் சிலோன் பெவரேஜ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 44,600 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,800 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 131.68 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 217.85 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X