2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அதிபர் இடமாற்ற விவகாரம்: போராட்டம்

Editorial   / 2020 ஒக்டோபர் 02 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபரான அருட்சகோதரியை மன்னார் ஆயர் இல்லத்தின் தலையீடு காரணமாக வங்காலை பாடசாலைக்கு மன்னார் வலயகல்வி பணிப்பாளரினால் திடீர் என இடமாற்றம் செய்துள்ளமையைக் கண்டித்து, குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இன்று  வெள்ளிகிழமை (2) காலை மீண்டும் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த பாடசாலையின் அதிபரான அருட்சகோதரி பாடசாலையில் கடமையை பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில் ,  திடீர் என வேறுஒரு பாடசாலைக்கு இடமாற்றியுள்ளமையினால் குறித்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் வலயக்கல்வி பணிமணையினால்  2ஆம் திகதி குறித்த பாடசாலை அதிபரை வங்காலை பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று செல்ல கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த போராட்டம்  இன்று  காலை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

இதன்போது முருங்கன் பொலிஸார் மக்களை அச்சுறுத்தும் முகமாக கலகம் அடக்கும்   பொலிஸாரை கொண்டு போரட்டத்தில் ஈடுபட்டவர்களை   அவ்விடத்தில் இருந்து அகற்ற முற்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் வலயகல்வி பணிப்பாளர் பிறட்லி,  பொது மக்களை ஆயர் இல்லத்துடன் சென்று கலந்துரையாடுமாறு தெரிவித்தார்.

குறித்த கருத்தை கண்டித்த  பெற்றோர், தமக்கு நீதியான பதிலை வலய கல்வி பணிமனை வழங்க வேண்டும் என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

உரிய தீர்வு கிடைக்காது விட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்ததுடன், சில மாணவர்களை பெற்றோர் பாடசாலையில் இருந்து வீடுகளுக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியில் போராட்டத்தை மேற்கொள்ள முயன்ற நிலையில், பொலிஸார், பெற்றோர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .