2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

அலுவலக உதவியாளர்கள் நியமனத்தில் உள்ளூர் இளைஞர்கள் புறக்கணிப்பு

George   / 2017 மே 09 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சியில் உள்ள சில அரச திணைக்களங்களில் அண்மைக்காலமாக, பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை, ஏற்கெனவே பல வருடங்களாக பணியாற்றி நிரந்தர நியமனம் கிடைக்காத, மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் இவ்வருடம் அலுவலக உதவயாளர்கள் 5 ​பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர், கரைச்சி பிரதேச செயலகத்துக்கும் இருவர், மாவட்டச் செயலகத்துக்கும் மற்றுமொருவர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், கிளிநொச்சி மாவட்டத்தில் பல வருடங்களாக பணியாற்றிய பலர், நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில் உள்ளநிலையில்,  தென்னிலங்கையில் இருந்து அலுவலக உதவியாளர்களாக, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, “மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் ஒருவர் ஒய்வுப்பெற்ற சில நாட்களிலேயே தென்னிலங்கையில் இருந்து  நியமனம் வழங்கப்படுகிறது”என, மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அலுவலக உதவியாளர் பதவி, அரசியல் செல்வாக்கின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. மிகவும் குறைந்த தகமைகள் தேவைப்படும் இப்பணிக்கு பொருத்தமான ஆயிரக்கணக்கானவர்கள், மாவட்டச் செயலக வேலை வங்கியில் தங்களது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.   

“இந்த பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள் நேரம் காலம் பார்க்காது, சமூகமளித்து கடமைகளைச் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக காணப்படுகிறது. எனவே, அந்தந்த மாவட்டச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதே இதற்கு பொருத்தமானதாகும்” என்றார்.

“தற்போது நியமனம் பெற்று வந்தவர்கள், சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் இடமாற்றம் பெற்று தங்களின் பிரதேசங்களுக்கு சென்றுவிட்டால், இங்குள்ள வெற்றிடம் நிரப்பப்படாமலேயே காணப்படும். ஆனால் பதிவில், ஆளணி வெற்றிடம் நிரப்பட்டதாகவே இருக்கும்” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .