2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

‘குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை’

Editorial   / 2017 நவம்பர் 07 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் ந.ஜெயராஜா, இன்று (07) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியின் சில இடங்களில், இரு மருங்கிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதேபோல, புதுக்குடியிருப்பு - வற்றாப்பளை வீதியிலும், இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுகின்றன.

மழைக்காலங்களில் குறித்த குப்பைகளால் தூர்நாற்றம் வீசுவதால், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பல்வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தன.

இவ்விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளரைத் தொடர்பு கொண்டுகேட்டபோதே, இவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“குறித்த பகுதிகளில், எந்தவித அனுமதிகளுமின்றிச் சிலர், சட்டவிரோதமான முறையில் குப்பைகளைக் கொட்டி வருகின்றார்கள். எதிர்காலத்தில் இவ்வாறு குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

“பிரதேச சபையால் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட்டு, மன்னாகண்டல் பகுதியில் கழிவுகளைக் கொட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

“புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளைச் சேகரித்து, அவற்றை பிரதேச சபைக்கு அறியத்தருமிடத்து, அவற்றை பிரதேச சபை உரிய முறையில் அகற்றும். அத்துடன், கழிவுகளை வீதி ஓரங்களிலும் வடிகால்களுக்குள்ளும் போட்டமையால், அண்மையில் பெய்த மழை வெள்ளத்தால் சில வீதிகளில் நீர் தேங்கிக்காணப்பட்டது.

“ஆகவே, கழிவுகளை உரிய முறையில் சேமித்து, பிரதேச சபை ஊடாக அகற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .