2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கிளிநொச்சி தீ விபத்து; ஜனாதிபதிக்கு கடிதம்

George   / 2016 செப்டெம்பர் 21 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

 

கடந்த 16ஆம் திகதி இரவு தீ விபத்தினால் முற்றுமுழுதாக சேதமடைந்த கிளிநொச்சி பொது சந்தை வர்த்தகர்களின் நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அவசர உதவி கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட முறை மிக மோசமானதாவும் நாளாந்த வாழ்வுக்கான அவர்களின் எதிர்பார்ப்பு  பரிதாபத்துக்கு உரியதாகவும் மாறியுள்ளது.

எமது மாவட்டத்தில் நிலவுகின்ற அனர்த்த முகாமைத்துவ வளக் குறைபாடுகள் மற்றும் தீயணைப்பு படையின் சேவையினை பெறமுடியாது உள்ளமை என்பவற்றால் தீயை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.

5 மணிநேரங்களுக்கு மேலாக பெரும் சுவாலையாக எழுந்த தீயினால் பொதுச்சந்தையில் அமைந்திருந்த புடைவை, மளிகை, பழக் கடைகள் உட்பட 124 கடைகளுக்கு ஏரிந்து அழிந்துள்ளன. இங்கே அமைந்திருக்கின்ற ஒவ்வொரு கடைகளும் சராசரி 2 மில்லியன் ரூபாய் முதலீட்டை கொண்டிருந்தன.

இவர்களின் மொத்த இழப்பு, 221 மில்லியன் ரூபாய்களுக்கு மேற்பட்டது என ஆரம்ப கணிப்புகளில் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே  யுத்தத்தினால் இழக்கப்பட்ட சொத்துகளுக்கு இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், வங்கிகளிலும் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிலும் பல இலட்சம் ரூபாய்களை இந்த வர்த்தகர்கள் கடனாக பெற்றிருக்கிறார்கள்.

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலட்சக்கணக்கான ரூபாய்களுக்கு கடன் கொள்வனவிலும் அவர்கள் ஈடுபட்டு இருந்தனர். திடீரென ஏற்பட்ட  தீ விபத்தினால் வர்த்தகர்கள் பெருநட்டம் அடைந்துள்ளதுடன் பாரிய மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

வர்த்தகர்களின் நீண்ட கடைத்தொகுதிகள் எரிந்து தரைமட்டமாகியுள்ளதால் உடனடியாக வர்த்தகத்தை மீள மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் தென்படவில்லை. ஆகவே, மேற்படி விடயம் குறித்து தாங்கள் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து உதவுமாறும், தங்களின் விசேட பணிப்பின் பேரில் அதிஉச்ச நட்டஈட்டினை வழங்கி உதவுமாறும் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றேன்” என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .