2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தென்பகுதி மீனவர்களை குடியேற்றுவதினால் நல்லுறவு பாதிப்படையும்

Niroshini   / 2016 மே 13 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தென்பகுதி மீனவர்களை மன்னாரில் குடியேற்றும் நடவடிக்கை மன்னார் மாவட்ட மீனவர்களை கவலையடையச் செய்கின்றது என மன்னார் மாவட்ட மீனவ சமுகம் தெரிவித்துள்ளது.

மன்னாரில் கடல் தொழிலில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் தொழில் செய்ய மாற்றிடம் கொடுத்து, அவர்களுக்கு குடியேற காணியும் வழங்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை சிலாபத்துறை பகுதியில் முன்னெடுக்கப்பட இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலயில், மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சருக்கு வழங்கும் வகையில் முசலி பிரதேசச் செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரனிடம் வழங்கப்பட்ட குறித்த மகஜரிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“குறித்த கவனயீர்ப்பு போராட்டம், மன்னார் மாவட்ட மீனவர்கள் தென் பகுதி மீனவர்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதையும் எமது பகுதியில் தென்பகுதி மீனவர்களை குடியமர்த்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையை கண்டித்தும் மன்னார் மாவட்ட மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 04ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற தென்பகுதி மீனவர்கள் தொடர்பான கூட்டத்தில், இம் மீனவர்களால் அமைக்கப்பட்ட கொட்டு வாடிகள் பருவ காலம் முடிந்து செல்லும் இம் மீனவர்கள் இதனை அகற்றிச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், கடற்றொழில் அமைச்சின் மேலதிக பணிப்பாளர், கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர், முசலி பிரதேச செயலாளர், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் அரச அதிபரால் அறிவிக்கப்பட்டது.

இருந்தும் எடுக்கப்பட்ட இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக அவர்களை இப்பகுதியில் குடியேற்ற திட்டமிடப்படுவதாக அறியக் கூடியுதாக உள்ளது.

கடந்த காலங்களில் தென்பகுதி மீனவர்களின் வருகை மற்றும் அவர்களின் தொழில்முறை ஊடாக பாதிக்கப்படும் எமது நிலையை அரச அதிகாரிகளுக்கு பலதடவைகள் தெரியப்படுத்தியுள்ளோம்.

இருந்தும் இதற்கு தீர்வை வழங்காத அதிகாரிகள் அவர்களை இங்கு குடியேற்ற எடுத்த நடவடிக்கை எமக்கு கவலையளிக்கின்றது.

தென்பகுதி மீனவர்கள் தொடர்பாக எம்மால் தொடர்ந்து கூறப்பட்டு வரும் விடயங்களான
இங்குள்ள மீனவர்களின் இறங்கு துறைகளில் அதிகளவு வாடிகளை அமைக்கின்றமை, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வந்தவர்கள் தற்போது கட்டுப்பாடில்லாமல் வருகின்றமை, இங்குள்ள சங்கங்களின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை, தங்களுக்குள் சங்கம் அமைத்து தன்னிச்சையாக செயற்படுகின்றமை.

மேலும் எமது பகுதி மீனவர்களில் 60 சதவீதமானோர் ஆறு மாத பருவகால தொழிலையே நம்பி வாழ்பவர்கள்.

இக் காலப்பகுதியில் தென்பகுதி மீனவர்களின் மிதமிஞ்சிய வருகையால் எமது வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைகின்றது.

1.யுத்தத்தில் இருந்து மீண்ட எமது மக்கள் இன்னும் பொருளாதார முன்னேற்றங்கள் அற்ற நிலையிலேயே காணப்படுகின்றனர்.

2.கடன்பட்டு நகைகளை அடகுவைத்து பிள்ளைகளின் கல்விஇமருத்துவ செலவுகளைக் கூட தொழில் செய்து மீட்டுக் கொள்கின்ற இப்பருவகாலப் பகுதியில். எமது எதிர்பார்ப்பை அடைய முடியாமல் தென் பகுதி மீனவர்களின் வருகை தடுக்கின்றது.

3.கடந்த ஓரிரு வருடங்களாக எமது மீனவர்களுக்கும் தென் பகுதி மீனவர்களுக்கும் இடையே ஓர் முருகல் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இம்மீனவர்களை குடியமர்த்த முன்னெடுக்கப்படும் இந்ந டவடிக்கையினால் எங்களுக்குள் இருக்கும் நல்லுறவு மேலும் பாதிப்படையும்இஅத்தோடு சமாதானத்திற்கான குந்தக நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் தோன்றுகின்றது.

4.ஒவ்வொரு வருடமும் இவர்களது வருகை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலிருந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையானது எம்முடைய மீனவர்களின் அன்றாட மீன்பிடியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

5.தென் பகுதி மீனவர்களின் அத்து மீறிய வருகையும் அனுமதியின்றி கடற்கரை யோரங்களில் கொட்டகைகள் அமைத்தலும் பருவகாலம் முடிந்த பின்பும் அவற்றை அகற்றாமல் அப்படியே விட்டுச் செல்லுகின்ற நிலமையும் எமது கரைவலைத் தொழிலைக் கூட செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துகின்றது.
 
6.கடற்றொழில் அமைச்சர் அவர்களின் மகாசம்மேளன கூட்டத்தின் போது தென்பகுதி மீனவர்கள் வடபகுதியில் அவர்களின் தொழில் நடவடிக்கையினை மேற்கொள்ளும் போது அப்பகுதி மீனவர்களின் அனுமதியுடன் தொழில் செய்வதற்கு அமைச்சு அனுமதி வழங்கியது. இருந்த போதிலும் அந்நடை முறையை இவர்கள் பின்பற்றுவதில்லை.

எனவே, எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் நல்லுறவையும் பாதிக்கின்ற இவ்வாறான செயற்பாடுகள் மற்றும் தென்பகுதி மீனவர்களின் குடியேற்றங்கள் உடன் நிறுத்தப்பட்டு, அவர்களின் வருகையை கட்டுப்படுத்தி மன்னார் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தரும்படியும் சுதந்திரமாக தொழில் செய்வதற்கு ஆவண செய்து தருமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X