2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நந்திக்கடல் கரையோரங்களை இராணுவத்தினர் திறந்தனர்

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து, நந்திக்கடல் கரையோரமாக இருந்த பாதுகாப்பு வேலிகள் பின்னகர்த்தப்பட்டு, மீனவர்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

நந்திக்கடலின் வடக்குப் பகுதியில் தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், கரையில் தொழிலை கடற்படை மேற்கொள்ள அனுமதிக்காமை, முகத்துவாரம் பகுதிக்கு செல்வதற்கு பாதை விடாமை, வாழ்வாதார பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, முல்லைத்தீவு நந்திக்கடல் சிற்றளவு மீனவர் சங்கத்தால் அண்மையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் - வவுனியா பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டையடுத்து, ஆணைக்குழு, கோத்தபாய கடற்படை முகாமின் பொறுப்பதிகாரியையும் அடுத்தகரையில் அமைந்திருக்கும் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியையும் முறைப்பாட்டாளரையும் விசாரணைக்கு ஆழைத்து, சிற்றளவு மீன்பிடியில் ஈடுபடும் தரப்பினது பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன், மீனவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பிலும் எடுத்துக்கூறப்பட்டது.

ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்வதாகத் தெரிவித்த படையினர், நந்திக்கடல் மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கையின் பொருட்டு, பல விடயங்களை தாம் மேற்கொள்வதாக ஆணைக்குழுவுக்கு உறுதியளித்தனர்.

இதையடுத்து, நந்திக்கடலின் ஒரு பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், சிறுகடல் வரை இட்டிருந்த முட்கம்பி பாதுகாப்பு வேலிகளை பின்னகர்த்தியுள்ளனர்.

இதன் மூலம், மீனவர்கள் கரையோரமாகத் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் மறுபுறத்தில் இருக்கும் கடற்படையினர், கால அவகாசத்தை கோரியுள்ளதுடன், தாம் கரையோரமாகப் பாதுகாப்பு வேலிகளை இட்டதன் பின்னர், கரையோரமாகத் தரித்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன், நந்திக்கடலின் கடலோரமாக அமைந்துள்ள பகுதியில், தொழில் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி நேரடியாக ஆராயும் முகமாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்ஷனவும் சட்டத்தரணியும் விசாரணை அதிகாரியுமான ஆர்.எல்.வசந்தராஜாவும் அப்பகுதிக்கு திங்கட்கிழமை (07) சென்றனர்.

இதன்போது, முன்னேற்றங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டியிருக்கும் பிரச்சினைகள் பற்றி மீனவ பிரதிநிதிகளுடனும் இராணுவத்தின் 591 பிரிகேட் பிரிகேடியர் வணசிங்கத்துடனும் பிரியதர்ஷன கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .