2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிவாசலுக்கு முன் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் பள்ளிவாசலை அண்மித்த பகுதியில், அனுமதியின்றிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தும், அவற்றை அகற்றுமாறு வலியுறுத்தியும், வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக, வவுனியா இளைஞர்கள் சிலரால் ஆர்ப்பாட்டாமொன்று இன்று (31) காலை முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், “வவுனியாவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை அகற்றுவதே, எமது நோக்கம்; இன மதங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவது எமது நோக்கமல்ல.

“1995ஆம் ஆண்டு, 16 வியாபார நிலையங்களுக்கு அப்பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது 80இற்கும் அதிகமாக வியாபார நிலையங்கள், சட்டவிரோதமான முறையில் நடைபாதையிலும் பள்ளிவாசலை அண்மித்த பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

“வவுனியா நகரசபையில் முன்னர் ஆட்சிபுரிந்த அரசியல் பிரமுகர்கள், இதற்கு அனுமதியளித்துள்ளனர். இப்பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் குறிப்பாக வீதி அதிகாரசபையிடம் வினவியபோது, அரசியல் தலையீடு காரணமாக, முன்னர் அவற்றை அகற்ற முடியவில்லை என குறிப்பிட்டனர்.

“எனவே, நடைபாதையில் வியாபார நிலையங்களை அகற்றும் வரை எமது போராட்டத்தைத் தொடருவோம்” எனத் தெரிவித்தனர்.

இதன்போது, சம்பவ இடத்துக்கு வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர். தயாபரன் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

பின்னர் இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

“இச்சம்பவம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றிடமே உள்ளது. இவ்விடயமாகத் தலையிடுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை, ஆனால், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற போராட்டம் தொடர்பாக, வீதி அதிகாரசபையினருக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினருக்கும் கடிதம் ஒன்றை அனுப்ப முடியும்” என்றார்.

 

இதைத்தொடர்ந்து, போராட்டம் மேற்கொண்ட இளைஞர்களால், நகரசபைச் செயலாளருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .