2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மன்னாகண்டல் குளம் உடைந்து பெருக்கெடுத்தது

Editorial   / 2017 நவம்பர் 07 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட மன்னாகண்டல் குளம், நேற்று (06) உடைந்து, நீர் முழுவதும் வீண்விரயமாகியுள்ளது.

குறித்த குளத்தில் இரண்டு தடவைகள் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், குறித்த பகுதியின் அபிவிருத்திப் பணி, சரிவர செய்யப்படவில்லை எனவும், இது அதிகாரிகளின் தவறு எனவும், பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்துப் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த துருசின் கீழ் பகுதியில் பழமையான கொட்டு ஒன்றே காணப்பட்டிருப்பதாகவும் குறித்த பகுதி அபிவிருத்திப் பணிக்கு நிதி ஒதுக்கவில்லை எனவும், அவ்விடத்தில் உமை ஏற்பட்டு உடைப்பெடுத்திருக்கிறது எனவும் தெரிவித்தனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அப்பகுதி கமக்கார அமைப்பின் தலைவர்,

“கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக, வரட்சி காரணமாக நீர் இல்லாது விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தக் குளத்தில் அண்மைய நாட்களாக நீர் நிறைந்து வருவதைப் பார்த்து சந்தோசமடைந்தோம். திங்கட்கிழமை அதிகாலை, இந்தக் குளம் உடைப்பெடுத்து குளத்து நீர் வெளியேறியுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் வந்து பார்வையிட்டுள்ளனர். இதனை உடனடியாக சீர்செய்யும் சாத்தியக்கூறு காணப்படுகிறது.

“எனவே, விரைவாகப் புனரமைத்தால், இனிவரும் நீரையாவது தேக்கி, எமது குளத்தின் கீழுள்ள நூறு ஏக்கர் வரையான வயல் நிலங்களைக் காப்பாற்ற வழிவகுக்கும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .