2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மனித புதைகுழி வழக்கு; ஜுன் வரை ஒத்திவைப்பு

George   / 2016 ஏப்ரல் 29 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிக்கு சற்று அருகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுன் மாதம் 6 திகதி வரை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா ஒத்திவைத்துள்ளார். 

மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்ட இடத்துக்கு சற்று தொலைவில் அடையாளம் காணப்பட்ட கிணற்றை தோண்டுவது தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.45 மணியளவில் குறித்த புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

'மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டுவதற்கான நடை முறைகள் எவையும் இல்லை. குறித்த நடைமுறைகள் சம்மந்தமாக மனித புதை குழி தோண்டுவதற்கான ஒழுங்கு விதி ஒன்றை வரைந்துள்ளோம். குறித்த ஒழுங்கு விதிகளை சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளோம். அதனை சுகாதார அமைச்சு, நிதி அமைச்சு மூலம் நடைமுறைக்கு கொண்டு வரும். அதன் பின்னர்,  மனித புதைகுழியை தோண்ட முடியும்' என சிரேஸ்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் வைத்தியரட்ன, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

குறித்த வழக்கு விசாரணைகளுக்கு காணாமல் போனவர்களின்  குடும்ப  உறவுகள் சார்பாக கலந்து கொண்ட சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவிக்கையில்,

'குறித்த வழக்கின் பிரகாரம் ஏற்கெனவே மன்னார் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நீதிமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டிருந்ததோடு, ஏற்கெனவே அழைக்கப்பட்ட 13 அரச திணைக்களங்களின் அதிகாரிகள், படைத்தரப்பினர், திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் உட்பட  பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, கண்டு பிடிக்கப்பட்ட கிணறு தோண்டுவது குறித்தும் அதன் நடைமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த கிணற்றை தோண்டுகின்ற போது தேவைப்படுகின்ற நிதியினை பெற்றுக்கொள்ளுவது எப்படி மற்றும் தோண்டுவதற்கான இயந்திய உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல், தோண்டும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதன் போது சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் வைத்திய ரட்ன, குறித்த் சில முக்கிய விடயங்களை முன் வைத்தார். அதனையடுத்து, இடமபெற்ற வழக்கு விசாரணையில் எதிர்வரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது' என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X