2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முத்திரை மோசடி: உயரதிகாரிகள் அசட்டையென விசனம்

Princiya Dixci   / 2016 மே 16 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டபோதிலும், உரிய அதிகாரிக்கு எதிராக இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், கடிதங்களை அனுப்புவதற்கு முத்திரைகளைப் பெறுவதற்காக அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.

கடமையிலிருந்த அஞ்சல் அலுவலகர், கடிதங்களை அனுப்புவதற்கு முத்திரை பெறவேண்டாமென்றும் கடனடிப்படையில் கடிதம் அனுப்புவதற்கு அரச திணைக்களங்கள் பயன்படுத்தும் முறைமையினைக் கையாளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்த முறைமையில் கடிதங்களை அனுப்பிவிட்டு அதற்கான கட்டணங்களைச் செலுத்துமாறும் கூறி, அவருடைய கடிதங்களை முத்திரையில்லாது பெற்றுக்கொண்டுள்ளார்.

முத்திரை வழங்கப்படாத நிலையில், அவருக்குச் சிறுசிறு துண்டுகளில் முத்திரைக்கட்டணத்துக்கான பற்றுச்சீட்டை வழங்கியுள்ளார். 

எனினும், அந்த முத்திரைக்கட்டணங்கள், அஞ்சல் திணைக்களக் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

இவ்வாறு சுமார் 81 ஆயிரத்து 500 ரூபாயை, அஞ்சல் அலுவலக  கணக்கில் வைக்காது அவர் மோசடி செய்துள்ளார் என்றும் தெரியவந்தது.

இவை தொடர்பில், பிரதேச இளைஞர்கள், உயரதிகாரிகளின் கவனத்துக் கொண்டுவந்ததையடுத்து, 28.03.2016 அன்று நேரடியாக சமூகமளித்திருந்த கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், அந்த அலுவலகருக்கு எதிராக இதுவரையிலும் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X