2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வடக்கிலுள்ள இராணுவம் 'யுத்தத்துக்கானது அல்ல'

George   / 2016 மே 05 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

'வடக்கில்  நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து அனுப்புவதல்ல எமது நோக்கம். அவர்களிடமிருந்து  வடக்கு  மக்கள் என்னென்னத் தேவைகளைப் பெற வேண்டுமோ, என்னென்ன பிரயோசனங்களைப் பெற வேண்டுமோ, அவற்றையெல்லாம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதையே நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்' என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். 

கிளிநொச்சிக்கான விஜயமொன்றை செவ்வாய்க்கிழமை (03) மேற்கொண்டிருந்த ஆளுநர் குரே, பூநகரி விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடத்தை திறந்துவைத்துவிட்டு, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'வடமாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை  வெளியேற்ற  வேண்டும், கல்விச் செயற்பாடுகளில் இராணுவத்தினர் இணையக்கூடாது என்ற குற்றச்சாட்டுக்கள் பரந்தளவில் நிலவி வருகின்றன. ஆனால், இராணுவத்தினரை இங்கிருந்து அனுப்புவதல்ல எமது நோக்கம். அவர்களிடமிருந்து, பெறக்கூடிய அனைத்துப் பயன்களையும் பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும்' என்றார். 

'கடந்த காலங்களில் வடக்கு - கிழக்கில் நிலவிய யுத்தம் காரணமாக இரண்டு பக்கங்களிலும் இழப்புக்கள் நேர்ந்தன. இரத்த சிந்தல்கள் ஏற்பட்டன. இனி நாம் அவற்றையெல்லாம் மறந்துவிடுவோம். கடந்தகால கோபங்கள், வைராக்கியங்கள் எல்லாவற்றையும் மறந்து, எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம். கடந்த காலத்தை மீண்டும் எதிர்காலத்துக்குள் கொண்டுசெல்ல முடியாது. எனவே, எதிர்காலத்தில் புதிய ஓர் உலகை நோக்கிப் பயணிப்போம்' என்றும் அவர் கூறினார். 

'இன்று (03), கிளிநொச்சி மக்களுக்கு விசேடமான நாளாகும். அழிந்து போன இடங்களை இராணுவத்தினர் புனரமைத்துக்கொண்டுள்ளார்கள். இப்போது இங்குள்ள இராணுவம்,  யுத்தத்துக்கானது அல்ல.

வைராக்கியங்களை உடைத்தெறிந்து அன்பு செலுத்துபவர்களாகவே அவர்கள் இங்குள்ளார்கள். சமாதான இராணுவம் மற்றும் அபிவிருத்திக்கான இராணுவம் என்ற வகையிலும்  ஒற்றுமைக்கான தூதுவர் என்ற  வகையிலுமே இராணுவம் இங்கு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. மக்களுக்கான சேவைகளைச் செய்வதே தமது கடமை என்ற ரீதியில் அவர்கள் இங்கு பணியாற்றிக்கொண்டுள்ளார்கள். எனவே, அவர்களது சக்தியையும் பலத்தையும் பெற்று, வடக்கை  அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்வோம்' என ஆளுநர் மேலும் கூறினார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X