2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'நில மீட்பு போராட்டம் சர்வதேசத்தை சென்றடையும்'

Niroshini   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மூன்று நாட்களில் மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்படுவீர்கள் என்ற உறுதி மொழியுடன் கடந்த 2007ஆம் ஆண்டு கடற்படையினரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முள்ளிக்குளம் மக்கள், இன்று வரை மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில் கடற்படையினர் தமது குடும்பங்களை முள்ளிக்குளம் மக்களின் வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளதை கண்டிப்பதாக, வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் தலைவியும் வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி, மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள தமிழ்  மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் நேற்று 16ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் பிரதி நிதிகள் , மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகியோர் முள்ளிக்குளம் கிராமத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து உரையாடினர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த மக்களின் நில மீட்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நானும் என் சக தோழர்களும் வருகை தந்தோம். 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் 3 நாட்களில் மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்படுவீர்கள் என கூறி, கடற்படையினர் முள்ளிக்குளம் கிராம மக்களை பலவந்தமாக வெளியேற்றினர்.

அந்த மக்களின் உடமைகள் எவையும் கையில் எடுக்காத நிலையில் அந்த மக்களை அவசர அவசரமாக வெளியேற்றியுள்ளனர். ஆனால், 10 வருடங்கள் கழிந்துள்ள போதும் இன்று வரை அவர்களின் நிலங்களை கடற்படையினர் விடாது தமது கும்பங்களை குடியேற்றியுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு வருட கால நீடிப்பை எடுத்துக்கொண்டுள்ள நிலையில் முள்ளிக்குளம் மட்டுமல்ல மறிச்சிக்கட்டி, வலிவடக்கு,கேப்பாப்பிலவு, சம்பூர், ஆகிய கிராம மக்கள் தமது சொந்த நில மீட்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நில மீட்பு மட்டுமல்ல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா, கிளிநொச்சி, வடமராச்சி போன்ற பகுதிகளில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்கம் அசட்டையீனமாக நடந்து கொள்ளுகின்றது. இன்று வரை போராட்டக்காரர்களின் போராட்டங்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தறுவேண்டும் என்ற ஒரு வாக்குறுதியைக்கூட வழங்காமல் சர்வதேசத்தின் ஆதரவுடன் தன்னுடைய அராஜகமான போக்குகளை கையாண்டு வருகின்றது.

எனவே, குறித்த மக்களின் நியாயமான கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும். முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி மக்களின் நில மீட்பு போராட்டம் சர்வதேசத்தை சென்றடையும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .