2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'புதுக்குடியிருப்பு மக்களின் வீடில்லாப் பிரச்சினையை கொழும்பில் வலியுறுத்துவேன்'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, இன்று  செவ்வாய்க்கிழமை (20) நாடாளுமன்றத்தில் உரிய அமைச்சர்களைச் சந்தித்து காத்திரமான முடிவுகளை மேற்கொள்வோம் என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டி தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்ட, வீடுகளை இழந்து இதுவரை வீடுகள் கிடைக்காத மக்கள், நேற்றுத் திங்கட்கிழமை (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்களுடன் நேரில் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு உறுதிமொழியை வழங்கினார்.

அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  வைத்தியர் சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ் கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், கே.மஸ்தான் ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரைப் பெற்றுக்கொண்ட வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், இந்தக் கோரிக்கையின் நியாயத்தன்மையை தாங்கள் உணர்ந்துகொண்டதாகவும், இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதன் பின்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்புக்குழுகூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை எடுத்துக்கூறிய அமைச்சர் ரிஷாட் பதியுதீனும், டாக்டர். சிவமோகன் எம்.பியும், வீடில்லாத மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், தீர்க்கமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென கூறினர்.

அமைச்சர் ரிஷாட் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

வீடுகளை வழங்குவதற்கான புள்ளியிடல் திட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச மக்களுக்கு தளர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கென ஒதுக்கப்பட்ட வீடுகள் போதாது எனவும், இந்த மக்கள் படும் கஸ்டங்கள்  வேதனையானது எனவும் கூறினார்.

வீட்டுத் திட்டத்தில் மத்திய அரசு ஒரு முடிவும், மாகாணசபை இன்னொரு முடிவும், ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வேறொரு முடிவும் மேற்கொள்ளப்படுவதன் மூலம், இந்தப் பிரச்சினையை இன்னும் சில வருடங்களுக்கு இழுத்தடிப்பதாகவே முடியும்.

எனவே, மூன்று சாராரும் ஒருமித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் இங்கு உணர்த்தினார்.

ஆகவே, நாளை புதன்கிழமை மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனை, வன்னி மாவட்ட எம்.பிக்கள் ஆகிய நாங்கள் சந்திப்போம் எனவும், இந்தப் பிரச்சினையை அவருக்கு விளக்கி, உரிய பரிகாரத்தை மேற்கொள்வோம் எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .