2025 ஜூலை 30, புதன்கிழமை

வவுனியா மாவட்டத்திற்கு அமைச்சு பதவியொன்று வேண்டும்: உறுப்பினர் லிங்கநாதன்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மூவின மக்களும் வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வடமாகாண சபையில் அமைச்சு பதவியொன்று அவசியமானது என வடமாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'வவுனியா மாவட்டமானது வட மாகாணத்தின் எல்லையாகவும் மூவின மக்கள் வாழும் பிரதேசமாகவும் அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் முக்கிய பிரதேசங்களில் ஒன்றாகவும் விளங்கி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

இதற்கு மேலாக நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் நாம் எதிர்பார்க்காத வகையில் அரச தரப்பில் பெரும்பான்மையின பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழர்களுக்கும் பெரும் சவாலாக அமையும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

ஆகவே, எமது எதிர்கால செயற்பாட்டை எமது பிரதேசத்தில் வலுப்படுத்த வேண்டிய தேவையுள்ளதால் அமையவுள்ள மாகாண அமைச்சில் ஓர் அமைச்சை எமது மாவட்டத்திற்கு வழங்குவதனால் பாதிக்கப்பட்ட சமூகம் எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்கவும் கட்சியை பலப்படுத்துவதற்குமாக அமையும்.

ஆகையினால், எமது மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கத்துக்கு  வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும். கடந்த காலங்களில் வன்னிப்பிரதேசத்தில் ஏற்பட்ட யுத்த இயற்கை அனர்த்தங்களின்போது வைத்திய அதிகாரியாகவும் மனிதாபிமான நிறுவனங்களிலும் அளப்பரிய சேவையாற்றி இவர் சிறந்த முகாமையாளராகவும் செயற்பாட்டாளராகவும் விளங்கியுள்ளார்.

எனவே இவருக்கு கடந்த 15 வருட கால அனுபவம் அமைச்சொன்றை சிறந்த முறையில் செற்படுத்துவதற்குள்ள தகுதியை கொண்டுள்ளமையை மேலும் உறுதி செய்கின்றது' என்றும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .