2025 ஜூலை 23, புதன்கிழமை

அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் அருகிவருகின்றது: சி.வி

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத் 

உள்நாட்டில் எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் அருகிவருகின்றது. இதன் காரணமாக பலரும் சர்வதேச அரசியல் நெருக்குதல்களை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (17) நடைபெற்ற முள்ளந்தண்டுவடம் பாதிப்படைந்தோர்க்கான சுகாதார பராமரிப்பு நிலையம் திறப்புவிழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணசபை நிறுவப்பட்ட பின்னர்; முதலாவது முள்ளந் தண்டுவடம் பாதிப்படைந்தவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையம்,'வைகறை'என்ற பெயர்சூட்டி திறந்து வைத்துள்ளளோம். 

மூன்று தசாப்தகால  யுத்தத்தின் கொடிய விளைவுகளை வடுக்களாக சுமந்து நிற்கும் எமது மக்களுக்கு செய்ய வேண்டிய கட்டாயக் கடமைகளில் ஒன்றாக இதனை  நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.

ஒருமனிதனின் இயக்கத்திற்கு முள்ளந்தண்டுவடம் என்பது முதன்மையானது. அவனின் முழுசெயற்பாடுகளுக்கும் அதுவே உறுதுணையாக உள்ளது. எனவேதான் இது பாதிப்படையும் போது நாம் சுயமாக இயங்க முடியாதவர்களாக மாறுகின்றோம்.

கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தினால் பலர் முள்ளந்தண்டுப் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள் அதிலும் குறிப்பாக  2009ல் நடைபெற்ற இறுதியுத்தத்தில் போது  நடைபெற்ற எறிகணைத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புக்கள், துப்பாக்கிப் பிரயோகங்களினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்றுதாமாக இயங்க முடியாதவர்களாக உள்ளனர்.

இவர்களிலும் குறிப்பாக மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களும் பொதுமக்களுமாகச் சேர்ந்து பெரும்பாலாக இளம் வயதினரே இவ்வாறாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் குடும்பத் தலைவர்களும் இதனுள் அடங்குகின்றனர். இதனால் இவர்களின் உழைப்பில் தங்கியிருந்த குடும்ப அங்கத்தவர்களின் வருமானம் இல்லாது போனதுடன், சுயமாக இயங்க முடியாத இவர்களை குடும்பத்தின் ஏனையவர்கன் பராமரிக்க வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப்பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு இதற்கான போக்குவரத்துவசதிகளும் இல்லை. பொருளாதாரவசதிகளும் இல்லை. எனவேதான் இவ்வாறான ஒருநிலையம் அமைக்கப்பட்டிருப்பது இவர்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

எமது நாட்டில் தற்போது காணப்படும் சுகாதார சேவையில் இவ்வாறான பராமரிப்பு நிலையங்கள் இல்லை. இவற்றை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடும் அமைச்சிடம் இல்லை. எனினும் எமது வடமாகாண சபையானது காலத்தின் அவசியத் தேவைகருதி இவ்வாறான நிலையமொன்றைத் திறப்பதற்கு முதல் முயற்சி எடுத்துள்ளது.

சிலர்; கேட்கலாம் 'ஏன் இந்தநிலையம் வவுனியாவில் திறக்கப்படுகின்றது'என்று. நான் ஏற்கனவே கூறியதுபோன்று இதற்கான நிதிவளம் இல்லாத நிலையில் ஏற்கனவே இருந்தவளங்களைப் பயன்படுத்தியே இந்நிலையத்தை முதற்கட்டமாக இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேபோன்ற நிலையங்களை மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்க எமக்கு நிதிவளம் தேவைப்படுகின்றது.

நாங்கள் பெரும்பாலும் அரசியல் பேசுவதிலேயே இன்று காலம் கழித்து வருகின்றோம். எமது மக்கள் எழுந்து நடக்க முடியாமல் முனகிக் கொண்டிருக்கும் போது தூரத்தே தெரியும் அரசியல் இலக்குகளை அவர்களுக்கு எடுத்துரைப்பதால் பயன் ஏதுவும் இல்லை. அதற்காக அரசியல் தீர்வுகள் வேண்டாம் என்று கூறவில்லை. யதார்த்தத்தை உணர்ந்து எவற்றுக்கெல்லாம் முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதை ஊகித்தறிந்து மக்கள் நலம் நாடி அதற்கு முன்னுரிமை கொடுத்து நடந்து, அதேநேரத்தில் அரசியல் இலக்குகளையும் அடைய ஆவண செய்யவேண்டும் என்றார்.

உள்ள10ரில் எமக்கு அரசியல்த் தீர்வுகிடைக்கும் என்ற எண்ணம் அருகிவருகின்றது. இதனால்த்தான் பலரும் சர்வதேச அரசியல் நெருக்குதல்களை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அந்தக் காலகட்டத்தில் அதன் போது நோயினால் அல்லற்படுபவன், வறுமையால் வாடுபவன், அச்சங்களினால் அச்சுறுத்தப்படுபவன் என்னசெய்வது, அவன் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைக் கொண்டு வருவது எமது தலையாய கடனல்லவா.

எங்கள் உள்ளங்களில் பரிவு, அன்பு, பாசம் போன்றவை எழுந்தால்தான் மக்களின் நலம் நாட நாம் முன்நிற்போம். அப்பேர்ப்பட்ட அன்பின் பிரதிபலிப்பே இன்று திறக்கப்பட்ட இந்த 'வைகறை' பராமரிப்பு நிலையம். தூரத்துப் பச்சைக்காக நாங்கள் காத்துநிற்கும் அதேநேரம், நேரத்துக்கு உகந்த நடவடிக்கைகளை எம் மக்கள் நலம் கருதி எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .