2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கொக்கிளாயில் விஹாரை கட்டும் பணியை நிறுத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Sudharshini   / 2015 ஜூன் 01 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கொக்கிளாயில் விகாரை கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு அவர் திங்கட்கிழமை (01) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொக்கிளாயில் மருத்துவமனை அமைந்துள்ள பகுதி மற்றும் அதற்கு அண்மையிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை நீதிமன்றத்தின் ஆணையையும் மீறி அபகரித்து படைத்தரப்பினரின் உதவியுடன் பௌத்த துறவி ஒருவர் விஹாரையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இக்காணி அபரிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு முறைப்பாடுகளைச் செய்தும் இன்றுவரை குறித்த காணி உரியவரிடம் கையளிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்பொழுது அங்கு விஹாரையை கட்டும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகின்றது.

வடமாகாணத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்த விஹாரை கட்டுமானங்களுக்கு எதிராகவும், குறிப்பாக தனியார் காணிகளை அபகரித்து விஹாரை அமைக்கும் பணிகளுக்கு எதிராகவும் நாம் தொடர்ந்தும் எமது எதிர்ப்பினைத் தெரிவித்து வந்துள்ளோம்.

மேற்படி கொக்கிளாய் தனியார் காணி தொடர்பாக முந்தைய அரசாங்கத்துடனும் பல்வேறு முறைப்பாடுகளைச் செய்துள்ளோம். கொக்கிளாயில் உள்ள தனியார் காணி தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில்; இப்பொழுது கொக்கிளாயில் உள்ள தனியார் காணியில் விகாரை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் தலைமையில் படையினர் உங்களது ஆணைக்குக் கட்டுப்பட்டு இத்தகைய சட்டவிரோதமான தர்மத்துக்கம் நீதிக்கும் புறம்பான பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால், இன்றும் சட்டத்தின்மீது எவ்வித அச்சமும் தயக்கமுமின்றி சட்டத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தங்களது அரசாங்கம் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த தவறுமானால், நல்லிணக்கம் என்பது அர்த்தமற்றதாகிவிடும் என்று நாங்கள் உணர்கின்றோம். ஆகவே, தாங்கள் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு, கட்டுமானப் பணிகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து, படையினரை திரும்பவும் தங்களது முகாம்களுக்குள் இருக்குமாறு பணிப்புரை வழங்க வேண்டும்.

அத்துடன், குறித்த காணியை உரித்துடைய தனியாருக்கே ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். இது மட்டுமே வடமாகாணத்தில் அமைதியையும் இயல்பு வாழ்வையும் மீளக் கட்டியெழுப்பும். இந்த விடயத்தில் தங்களது காத்திரமான உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .