Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 07, சனிக்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை மறுதினம் விடியப்போகும் ஒரு பொழுதுக்காக இன்று எத்தனை எத்தனையோ இதயங்கள் ஏங்கிக்கொண்டிருக்கும். ஆம்! பெப்ரவரி 14ஆம் திகதி, உலகளாவிய ரீதியில் அன்பைப் பரிமாறும் தினமான 'வெலன்டைன் டே' கொண்டாடப்படவுள்ளது.
இத்தினம் ஆரம்பித்தமைக்கான கதைகள் பல உலாவருகின்றன. எனினும், பெரும்பாலானவர்கள் நம்பும் கதை, காதலர்களைச் சேர்த்து வைத்த 'வெலன்டைன்' என்ற பாதிரியார் கொல்லப்பட்ட தினத்துக்குரிய கதையே.
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை 2ஆம் கிளாடியஸ் மன்னர் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்திலின்போது இராணுவத்தில் சேர்வதற்கு ஆண்கள் மறுத்தனர். மக்கள், குடும்பம் குடும்பமாக இருப்பதும், காதல் ஜோடிகளாகத் திரிவதும்தான் இதற்குக் காரணமென மன்னர் கருதினார்.
இதனால், ஆண்கள் திருமணம் செய்யத் தடை விதித்தார். திருமணம் செய்தால் ஆண்களின் வீரம் குறைந்துவிடும் என்பது மன்னரின் நம்பிக்கையாக இருந்தது. இதை 'வெலன்டைன்' என்ற பாதிரியார் எதிர்த்தார். மன்னரின் உத்தரவை மீறி, இரகசியத் திருமணங்கள் பலவற்றை நடத்தி வைத்தார். இந்த விடயம் மன்னரின் காதுகளுக்கு எட்டவே, வெலன்டைனைச் சிறையில் அடைக்க அவர் உத்தரவிட்டார். மன்னரின் உத்தரவுப்படி, கி.பி. 270ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி வெலன்டைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இரு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்துவைத்து பலரின் அன்பைப் பெற்றிருந்த வெலன்டைன் கொல்லப்பட்ட தினமே 'வெலன்டைன் டே' தினமாகக் கொண்டாடப்படுகின்றது. பாப்பரசர் கிளேஷியஸ்ஸே, கி.பி. 498இல் பெப்ரவரி 14ஆம் திகதியை வெலன்டைன் தினமாக அறிவித்தார்.
மேற்கத்தேய நாடுகளில் அன்பைப் பரிமாறும் தினமாகவே இத்தினம் அறியப்படுவதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தம் அன்புக்குரிய பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்போருக்கு பிடித்த பரிசில்களையும் வாழ்த்து அட்டைகளையும் வழங்கிக் கொண்டாடுகின்றனர். ஆனால், காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் 'காதலர் தினம்' என்றும் இத்தினம் அழைக்கப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் அன்னையர் தினம், தந்தையர் தினம், சிறுவர் தினம் மற்றும் பெண்கள் தினம் உட்பட இப்படியும் ஒரு தினம் இருக்கின்றதா எனக் கேட்கும் தினங்கள் (பலர் அறிந்திராத தினங்கள்) என எத்தனையே தினங்கள் கொண்டாடப்பட்டாலும் 'வெலன்டைன் டே' தினத்துக்கு அனேகர் முக்கியத்துவம் வழங்குகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம், வணிக ரீதியாக காதலர் தினம் நோக்கப்படுவதே ஆகும். காதலர் தினத்தில் தமது அன்பை வெளிப்படுத்துவதற்காக வாழ்த்து அட்டைகள், சொக்லேட்டுகள், மலர்கள், இறுவட்டுக்கள் மற்றும் புத்தகங்கள் என வாங்கும் பரிசுப் பொருட்களினால் வணிக ரீதியில் இத்தினம் முக்கியமாகக் கருதப்படுகின்றது. சர்வதேச ரீதியில் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படும் அளவில் கிறிஸ்மஸ் பண்டிகையை அடுத்து காதலர் தினமே இருக்கின்றது.
அமெரிக்காவில் சராசரியாக காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடியாகும். இப்பூக்களை போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை ஆண்களாலேயே நடக்கிறது. 'பூவுக்கே பூக்கொடுக்கிறேன்...' என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள்?, வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கின்றார்களாம்.
காதல், பல பருவங்களில் பலரைப் பற்றிக்கொள்கின்றது. சிலரை பாடசாலைக் காலத்திலேயே ஆட்கொண்டுவிடுகிறது. இந்தக் காதல் பெரும்பாலும் திருமணத்தில் முடிவது சந்தேகமே. காரணம், வெறும் உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களினால் வரும் எதிர்ப்பால் ஈர்ப்பாகவே இது பார்க்கப்படுகின்றது.
எனினும், பாடசாலையில் தோன்றும் முதல் காதலையே சிறந்த புரிதலுடன் பேணி, துணையாக்கிக் கொள்ளும் காதலர்களும் இல்லாமல் இல்லை.
சிலரைக் கட்டிளம் பருவத்தில் காதல் பற்றிக்கொள்கின்றது. இந்தக் காதல் திருமணத்தில் முடிய பெரும்பாலும் 90 சதவீதமளவில் வாய்ப்பிருக்கின்றது. காரணம், ஓர் ஆணும் பெண்ணும் தமது திருமண வயதையொட்டியிருக்கும் போதே இக்காதல் அரும்புவதால் அது திருமணத்தில் முடிகின்றது.
எனினும், கட்டிளம் பருவக் காதல் பெரும் போராட்டங்கள் நிறைந்ததாகவும் சுவாரஸ்யம் மிக்கதாகவும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும், வாழ்க்கைப் பாதையை திசை திரும்பும் ஒன்றாகவும் பலருக்கு அமைந்துவிடுகின்றது.
அதற்குச் சிறந்ததொரு உதாரணம் தான் கடந்த திங்கட்கிழமை (08) இடம்பெற்ற சம்பவம். பதுளை, உத்ஹித்த பூங்காவில் காதல் ஜோடியொன்றைக் கூரிய ஆயுதத்தால் இளைஞனொருவர் தாக்கிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது காதல் ஜோடியில் அலறல் கேட்டு அங்கு வந்த பூங்காவின் காவலாளிகள், இளைஞனைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேற்படி காதல் ஜோடி, பூங்காவில் மிக நெருக்கமாக இருந்த போது, அங்கு திடீரென வந்த யுவதியின் முன்னாள் காதலன் எனக் கூறப்படும் இளைஞனே, இருவரையும் கத்தியால் குத்தியுள்ளான். இதில் படுகாயமடைந்த ஜோடியை மீட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மௌசாகலையைச் சேர்ந்த யுவதியும் அவரது புதிய காதலன் எனக் கூறப்படும் புத்தள பகுதியைச் சேர்ந்த இளைஞனுமே காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட இளைஞனிடமிருந்து நஞ்சுப் போத்தலொன்று மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கைதான 24 வயதுடைய இளைஞனும் கத்திக்குத்துக்கு இலக்கான 22 வயதுடைய யுவதியும், சில காலங்களுக்கு முன்னர் காதலித்து வந்ததாகவும் யுவதியின் வீட்டார் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, இவ்விளைஞனை விட்டு யுவதி விலகியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சிறந்த புரிந்துணர்வு இல்லாமை, விட்டுக்கொடுக்கும் இயல்பு இல்லாமை, ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொள்ளுதல் மற்றும் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளாமை எனப் பற்பல காரணங்களினாலும் போராட்டங்கள் நிறைந்த காலமாக இது இருப்பதனால் மிகவும் அவதானத்துடனும் நிதானத்துடனும் காதலர்கள் நடந்துகொள்வது மிக மிக அவசியமாகிறது.
காதலர்களுக்கு இடையே சண்டைகள் வருவது இயல்பு. என்றாலும், சண்டையின் பின்னர் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து 'நான் இப்ப என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டாலே போதும். ஒன்றும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. சண்டைகள் காணாமல் போய்விடும்.
இதேபோல, அண்மையில் காதல் ஜோடியொன்றுக்கிடையில் சுவாரஸ்யமான ஒப்பந்தக் காதலொன்று அரங்கேறியிருந்தது. அதாவது, காதலன் - காதலி, காதலிக்கின்றார்களாம். பிடித்திருந்தால்தான் திருமணம் செய்துகொள்வார்களாம். 'ஐ லவ் யூ' என்று காதலி கூறினால், 'செருப்பால அடிப்பன்' என்றுகூட காதலர் கூறுவாராம். ஆனால், அவரும் அப்பெண்ணை உண்மையாகக் காதலிக்கின்றாராம். பிரியமானவளே திரைப்படத்தின் பகுதி 2ஆக அது தொடர்வதாக என் நண்பி கூறி அறிந்துகொண்டேன்.
வாழ்கையின் விபரீதங்களைப் புரிந்துகொள்ளாது, விளையாட்டுத்தனமாக இவ்வாறு நடந்துகொள்ளும் இளைஞர், யுவதிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். சிலருக்கு திருமணம் முடித்த பின்னர் தமது துணையின் மேல் காதல் பற்றிக்கொள்கின்றது. இதுவொரு பரிபூரணமான வாழ்க்கையின் ஆரம்பமாக அமைந்துவிடுகின்றது.
சிலருக்கு திருமண உறவுக்கு அப்பாலும் காதல்! மன்னிக்கவும்... கள்ளக் காதல் பற்றிக்கொள்கின்றது. உடலியல் தேவை மற்றும் பணம் அபகரிப்புக்காக இது ஏற்படுகின்றது. சிலருக்கு, நட்பு ரீதியாகப் பெறும் கரிசனை, ஆதரவு மற்றும் அதிகப்படியான கவனிப்பு என்பவற்றினால் காதல் பற்றிக்கொள்கின்றது. இவ்வாறான காதல்கள், பெரும்பாலும் இணையாத தண்டவாளங்களாகத் தொடர்கின்றன.
இவ்வாறாக, பலருக்கு பலவாறாக காதல் ஏற்படுகின்றது. எனினும், ஆரம்பகாலக் காதல்களுக்கும் இன்றைய நவீனயுகக் காதல்களுக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் ஏற்பட்டுவிட்டன.
அம்பிகாவதி - அமராவதி, ரோமியோ - ஜூலியட் மற்றும் ஷாஜகான் - மும்தாஜ் என வரலாறு கடந்த காவியக் காதல்கள் பல.
இவ்வாறான காதல்கள், வாய்மொழியால் கேட்டல் மற்றும் கடிதங்கள் பரிமாறுதல் என்பவற்றினால் கற்பனைகள் உதிரும் காதலாகக் காணப்பட்டன. இதனால், பல கவிஞர்கள் உருவாகினர். காதலுக்காக எழுதிய கடிதங்களை மறைத்து வைத்துப் பாதுகாப்பதிலேயே தனது காதலை மகிழ்ச்சியாக உணர்ந்தார்கள். தமது காதல் துணையைச் சந்திப்பதற்காக பல நாட்கள் காத்திருந்தார்கள். காத்திருப்புக்களிலேயே காதலை வளர்த்தார்கள்.
சீனர்களிடையே ஒரு சுவாரஸ்யமான கதையுண்டு. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்களாம். ஏழாவது மகளான ஸி நூ என்பவள், அழகிகளுக்கெல்லாம் அழகி பேரழகியாம். ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக்கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லோருடைய ஆடைகளையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.
ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நுவை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்த மேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் திருமணமும் செய்து கொண்டான் நுவூ.
விஷயம் தெரிந்த மன்னர், இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள், ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக்கொள்ள முடியும். அந்நாளைத்தான் சீனர்கள் காதலர் தினமாகக் கொண்டாடுகின்றனர்.
காத்திருந்து சந்திப்பதின் சுகத்தை வரலாற்றுக் காதலர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால், இன்றைய காதலர்கள் அப்பப்பா... நவீனத்துடனும் இயந்திரத்துடனும் பின்னிப் பிணைந்திருக்கின்றார்கள். (ஒரு சிலர் விதிவிலக்கு)
காதலர் தினத்தில் காதலி சிணுங்குவாளோ இல்லையோ எல்லா, அலைபேசிகளும் சிணுங்கோ சிணுங்கென்று சிணுங்கும். இன்றைய காதலர்கள், அலைபேசி மூலமாக தமது காதலை வெளிப்படுத்துகின்றனர். நேரடியான வாய்மொழித் தொடர்பு அற்றுப்போகின்றது. சிலபேர், 'ஐ லவ் யூ' என்று குறுந்தகவல் அனுப்பி. 'சாரி, மாறி வந்துவிட்டது' என்றும் சமாளித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.
முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர், ஸ்கைப் மற்றும் ஈ-மெயில் என இன்றைய காதல் தொடர்புகள் நீளுகின்றன. இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று, தனது காதலை வீடியோவாகப் பதிவு செய்து அதையே யூடியூப் போன்ற இணையத் தளங்கள் பதிவு செய்து உலகுக்குத் தங்கள் காதலை உரக்கச் சொல்கின்றார்கள். இவ்வாறு பல வீடியோக்கள், யூடியூப்பில் உலா வருவது அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன.
இவ்வாறான நவீனத் தொடர்புகளால் காதலர்களுக்கு இடையேயான சந்திப்புக்கள் அதிகமாகின்றன. கூடவே தவறுகளும் அதிகரிக்கின்றன. காதல் கடிதங்கள் போன்று மறைத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரோயொரு டிலீட் பட்டன் போதும்.
இன்னுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால், ஐ லவ் யூ - என்றால் மனசுக்குள் மழையடிக்கும். (சிலருக்கு இன்னும் மழையடித்திருக்காது) ஆனால், ஐ லவ் யூ என்றால் மனதுக்குள் திகிலடித்த ஒரு நிகழ்வையும் நாம் எளிதில் மறந்துவிட முடியாது. ஐ லவ் யூ எனும் ஒரு வைரஸ், கடந்த 2000ஆம் ஆண்டில் முப்பது இலட்சம் கணினிகளுக்கு மேல் பாதித்து செயலிழக்க வைத்துவிட்டது. 'ஐ லவ் யூ' என்று தலைப்பிட்டு எந்த மெயில் வந்தாலும் மக்கள் அன்று அலறினார்கள!. கம்ப்யூட்டர் வைரஸ் வரலாற்றில், இந்த ஐ லவ் யூ வைரஸ் நிரந்தர இடத்தையும் பிடித்திருந்தது.
எது எவ்வாறாயினும், காதலர்கள் எவ்வாறு காதலிப்பினும் யாரைக் காதலிப்பினும், தமது பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பெற்றோருக்குத் தெரியும். எனவே, அவர்கள் விருப்பம் இன்றி காதல் திருமணம் செய்ய எத்தணிக்காதீர்கள். உங்களது உண்மையான காதலை உங்களது பெற்றோருக்குப் புரிய வையுங்கள்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் (திருக்குறள்: 71)
அன்பிற்கும் உண்டோ பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் தாழ்ப்பாள், அன்புடையார் கண்ணிலிருந்து தோன்றும் நீர்த்துளிகளே, உள்ளத்தில் மறைந்து நின்ற அன்பினைப் பலர் அறிய பறை சாற்றிவிடும். பெற்றோரின் சம்மதத்துடன், உங்கள் துணையின் கரம்பற்றி மகிழ்ச்சிகரமான எதிர்காலத்தை உருவாக்கி வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.
ப. பிறின்சியா டிக்சி
aana 088 Friday, 12 February 2016 10:23 AM
Useless article. everyone knows this. we have so many things to think but not such these bulshits things.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
49 minute ago
52 minute ago