Freelancer / 2023 மார்ச் 17 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, அம்பலப்பெருமாள் குளத்தின் புனரமைப்புக்கு நிதியை பெற்றுத் தாருமாறு, வட மாகாண ஆளுநரின் செயலாளரை, கிராம கமக்கார அமைப்பினர் நேற்று (16) சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்னர் வட மாகாண ஆளுநருக்கு குளப் புனரமைப்புக்கான நிதியை பெற்றுத்தாருங்கள் என கமக்கார அமைப்பினால் கடிதம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் செயலகத்தால் கமக்கார அமைப்புக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், நேற்றைய தினம் கமக்கார அமைப்பினர் ஆளுநரின் செயலாளரை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கினர்.
“அம்பலப்பெருமாள் குளம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. அணைக்கட்டின் சேதம் காரணமாக ஒவ்வொரு பருவ மழைக் காலத்தின் போதும் பெருமளவு மண் மூடைகள் அடுக்கி குளத்தின் பாதுகாத்து வருகின்றோம்.
“குளத்தின் கீழான நீர்ப்பாசன வாய்க்கால்கள் புனரமைக்கப்படாததன் காரணமாக 200 ஏக்கருக்கு மேலான நிலப் பரப்புக்கு நீர்ப்பாசனம் செய்ய முடியாதுள்ளது.
“நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளால் உலக வங்கியின் உதவியுடன், 361 மில்லியன் ரூபாயில் குளத்தின் அணைக்கட்டு புனரமைப்பு வேலைகள் இடம்பெறும். குளத்தின் கீழான வாய்க்கால்கள் புனரமைப்பிற்கு 315 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த ஐந்தாண்டுகளாக கூறி வருகின்றனர்.
“ஆனால், நிதி வராததன் காரணமாக, குள வேலைகள் இடம்பெறாத நிலை காணப்படுகின்றது. குள புனரமைப்புக்கான நிதியை ஆளுநர் செயலகம் பெற்றுத் தர வேண்டும்” என கமக்கார அமைப்பினரால் ஆளுநரின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .