Freelancer / 2023 மார்ச் 29 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து, ஏறாவூரில் உள்ள பிரதான வீதியொன்றின் பெயரை மாற்றுவது தேவையற்றமுறையில் இனங்களுக்குடையே ஒரு பதற்றத்தைத் தூண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான அலி ஸாஹீர் மௌலானா தெரிவித்தார்.
காலியைச் சேர்ந்த மறைந்த வர்த்தகர் ஒருவரின் நினைவாக அஞ்சலி செலுத்தும் போர்வையில் ஏறாவூரில் உள்ள பிரதான வீதியொன்றின் பெயரினை இங்குள்ள மக்களுடன் கலந்தாலோசிக்காமல் பெயர் மாற்றம் செய்வது கவலையளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து புதன்கிழமை (29) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புன்னைக்குடா வீதியானது ஏறாவூரின் இதயம் போன்று ஊரின் மத்திய பகுதியினூடாக செல்லும் ஒரு பிரதான வீதியாகும், இது ஏ15 நெடுஞ்சாலையை புன்னைக்குடா கடற்கரையுடன் இணைக்கிறது.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் முயற்சியாக, வெளிநாட்டு நேரடி முதலீட்டை உள்வாங்குவதற்காக, முதலீட்டு சபையினது முதலீட்டலுடன் ஏறாவூர் புன்னைக்குடாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுவரும் புடவை உற்பத்தி வர்த்தக வலயத்துக்கு (பேப்ரிக் பார்க்) சென்றடையக்கூடிய அணுகல் பாதையும் இதுவாகும் .
இங்கு வாழும் மக்களதும், மற்றும் இந்த பிரதேசத்தில் அங்கம் வகிக்கின்ற முக்கிய பங்குதாரர்கள், நிறுவனங்களினதும் கலந்தாலோசனைகளும் இன்றி ஒருதலைப்பட்சமாக இந்த முக்கியமான பிரதான வீதியின் பெயரை மாற்றுவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “வியத்மக” என்ற கும்பலில் ஒருவர் என்ற தகுதியால் ஆளுனர் நியமனம் பெற்ற அனுராதா யஹம்பத்தின் அதிகார துஷ்பிரயோகத்தின் ஒரு வெளிப்பாடே தவிர வேறொன்றம் இல்லை.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கென்றே மாண்புமிக்க வரலாறும், பாரம்பரியமும் உண்டு.
ஒரு நபரை, ஓர் இடத்தை, ஒரு பொருளை நினைவு கூறும் வகையில் ஒரு வீதிக்கு பெயரை சூட வேண்டுமானால் - அதைத் தீர்மானிக்க வேண்டிய தகமையை அப்பிரதேச குடியிருப்பாளர்களிடமும், அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதிகளிடமும் இருக்க வேண்டும்.
தவிர, இனரீதியாக மக்களை பிளவுபடுத்தி ஆட்சிசெய்ய நினைத்த ஜனாதிபதியால் ஆளுனராக நியமிக்கப்பட்ட கொழும்பிலே, ஓர் அலட்சியமான ஆடை வடிவமைப்பாளாராக தன்னை சந்தை படுத்தியவரால் அல்ல .
ஏறாவூர் மக்கள் சார்பாக, இந்த வீதியின் பெயரை மாற்றுவதற்கான தான்தோன்றித்தனமாக விடுத்துள்ள தவறான உத்தரவை உடனடியாக இரத்து செய்யுமாறு கண்டனத்துடன் கோருகிறோம்.
ஆளுனர், அவரது அவசியமற்ற இவ்வாறான விசித்தரமான நடவடிக்கைகள், கிழக்கு மாகாணத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் கிழக்கு மாகாண மக்களின் விருப்பங்களுக்கு முரணாக இருப்பதை உணர்ந்து செயற்படுமாறும் கேட்டுக்கொள்வதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
17 minute ago
21 minute ago
27 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
27 minute ago
54 minute ago