Sudharshini / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எலும்புகள்
இறுகி உடைவதையும்
உதிரம்
உறைந்து போவதையும்
என்னால் உணர முடிகிறது.
தீயில் விழுந்த புழுவாய்
நானிப்போது
திணறிக் கொண்டிருக்கிறேன்.
கசக்கி எறிந்த காகிதம் போல்
என்னை
சுருட்டி எறிகிறது சோகம்.
வற்றிய குளமாக
வரண்டு போன இதயங்கள்
தொற்று நோயாய் பற்றிக் கொள்ளும்
துயரங்கள்
இவையெல்லாம் தொடர் கதைதானா..?
பிரிவு என்பது எரிவுதான்
அது
பிரியமுள்ளவர்களால் மாத்திரமே
புரிந்து கொள்ள முடிகிறது
சிரியாவின்
சின்னக் குழந்தை அலன்
துள்ளித்திரியும் வயதிலேயே
கடல்
அள்ளிக் கொண்டது அவனையும்...
அலன் குர்தி
அலையின் அழகை
இரசிக்க வேண்டிய குழந்தை
இப்போது
கடலின் ஓரத்தில்
கரையொதுங்கிக் கிடக்கிறது
உலகத்து மக்களின்
உணர்வுகளையெல்லாம்
உசுப்பி விட்டு
அமைதியாகிப் போனான் அலன்
அலன் என்ற விதை
அரபு நாடெல்லாம்
விருட்சங்களாக
வியாபித்து வளர வேண்டும்
அரபு நாடுகளின்
வளங்களைச் சுரண்டும்
வல்லரசுகளும்
அவர்களுக்கு
குடைபிடிக்கும் குறவர்களும்
ஒரு நாள்
ஒப்பாரி வைக்கத்தான் போகிறார்கள்
தப்பென்பதை
அவர்கள்
தலையில் சுமந்துக் கொண்டப்பின்
மரணத்தை
மடியில் சுமந்துக் கொண்டுதான்
அகதிகள்
அடியெடுத்து வைக்கிறார்கள்
அவர்களின்
அடிகள் ஒவ்வொன்றும்
சுவனத்தின் படிகளாகட்டும்
ஏனோ புரியவில்லை
முஹாஜிர்களை வரவேற்ற
முகாமைத்துவம்
அரபுகளின்
அடிமனதிற்கூட ஆழமாய்ப்
பதியவில்லை
ஐரோப்பாவில்தான்
ஈமானின் ஈரம்
துளிர்விடத் தொடங்கியிருக்கிறது
அகதிகளை அரவணைக்கும்
அர்த்தம் புரிந்திருக்கிறது
ஹிஜ்ரத்
ஈமான் கொண்டவர்களின்
இதயத்தோடு
இரண்டறக் கலந்திருக்கிறது
அவர்களுக்கு
போகுமிடம் போதாமலிருக்கலாம்
ஆனால்,
சொர்க்கத்துக்கான இடம்
சொந்தமாக்கப்பட்டிருக்கிறது
-மதியன்பன்
43 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
2 hours ago