Kogilavani / 2017 ஜூலை 11 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் கருசல் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதிமன்றத்தில் நேற்று (10) மாலை ஆஜர் படுத்தப்பட்ட பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களை மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.
மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில், கடந்த வியாழக்கிழமை (06) காலை 10 மணியளவில் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணிக்கு, சுற்றுவேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் நீதிமன்ற பதிவாளர் குறித்த இடத்தில் இருந்து சென்ற சில நேரத்தில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இடையூறுகளை மேற்கொண்டு வந்ததோடு, அமைக்கப்பட்ட சுற்று வேலிக்கான தூண்களை, பொலிஸார் முன்னிலையிலேயே உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (07) மதியம் குறித்த காணிக்கு பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் திரண்டு வந்து, குறித்த காணிக்கு போடப்பட்டிருந்த ஏனைய வேலித்தூண்களை உடைத்ததோடு, அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாக கருசல் கிராம மக்கள் தெரிவித்தனர்.
எனினும், வேலிக்கான தூண்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், கருசல் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்ற குறித்த நபர்கள் வீட்டின் பின்புறம் சென்று வீட்டு அறை ஒன்றுக்குத் தீ வைத்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த வீட்டின் அறை ஒன்றினுள் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் கடந்த சில தினங்களாக கருசல் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இனங்களுக்கு இடையில், முறுகல் நிலை ஏற்பட்டது.
நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்ட பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த சிலரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
எனினும், திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களினால் எறிந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் திருப்பலியில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் கோப நிலை ஏற்பட்டது.
இதனால் அங்கு மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது.உடனடியாக கருசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதிக்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இதன்போது மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் கருசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதிக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியதோடு மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் வன்முறையை தூண்டி விட்டவர்களை முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர் படுத்தப்பட்டனர்.
20 minute ago
32 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
2 hours ago
3 hours ago