Princiya Dixci / 2017 ஜனவரி 26 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல்போனோர் பற்றிய எந்தத் தகவல்களையும் இலங்கையில் தேடிக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் இருப்பவர்களைத் தவிர ஏனையவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இலங்கையில் கிடையாது எனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். “இவர்கள் இலங்கையில் இல்லாத அதேநேரம், சட்ட ரீதியான வழியில் நாட்டை விட்டுச் சென்றிருக்கவில்லை” என்ற கொள்கை ரீதியான தீர்மானமொன்றை, காணாமல்போனோர் தொடர்பில் எடுக்க வேண்டியிருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
காணாமல்போனோரின் உறவினர்கள், வவுனியாவில் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாகக் கேள்வியெழுப்பிய அநுர குமார திஸாநாயக்க, “யுத்த காலத்தின் போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். தமது கணவருக்கு, பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கான உரிமை, அவர்களுக்கு இருக்கிறது. இந்த பிரச்சினைக்குத் தீர்வொன்றை வழங்க, கணிசமான காலமாக நாம் தவறியுள்ளோம். இது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?” என்றார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
“குறிப்பாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி, திங்கட்கிழமை, இந்த விவகாரம் தொடர்பில் எம்முடன் பேசினார். தெரிந்த விவரங்களைத் தருவதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். தேவையென்றால் அமைச்சர் சுவாமிநாதன் நாளை (இன்று), வவுனியா செல்வதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார். இங்கு பிரச்சினை என்னவென்றால், இந்த நபர்கள் பற்றி எந்தத் தகவல்களையும் இலங்கையில் தேடிக்கொள்ள முடியாமல் இருப்பதாகும்.
“இதுபற்றி நாம். வினவிய போது பொலிஸார், இருப்பவர்கள் யார் என்பது பற்றி அறியத்தருவதாகக் கூறினார்கள். ஏனையவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இலங்கையில் இல்லை.
“வெளிநாடு சென்றார்கள் என்பதற்கான தகவல் எதுவும், எமது சட்டரீதியான முறைமைகளிலும் கிடையாது. ஒரு விடயம் இருக்கிறது, சட்டவிரோதமாக படகுகளில் வெளிநாடு சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் வழிகளில் சென்றார்களா என்று தெரியவில்லை. எனினும், தெரிந்த வரையில், இந்த விடயங்கள் அனைத்தையும் அறியத்தர முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“சென்றிருக்கலாம் என்றே இறுதியில் சிலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அங்கு ஒரு தயக்கம் இருக்கிறது. சந்தேகப்படும் வகையில், சிலர் உயிருடன் இல்லை என்றே நான் கருதுகிறேன். ஆகவே, அவ்வாறு சாட்சியங்கள் எவையும் இல்லாதவர்கள் தொடர்பில், அரசாங்கம் வழங்க வேண்டிய நட்டஈடு மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்பது தொடர்பில் நாம் பார்க்க வேண்டும்” என்றார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026