Princiya Dixci / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
“இந்தியாவைப் போன்றே, தமிழகத்துடனும் நாங்கள் நல்லுறவை வளர்க்கவேண்டும். தமிழக முதலமைச்சர்களில் ஒருவர்கூட இலங்கைக்கு உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்ட வரலாறு இல்லை” என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
“எமது பிரச்சினைகளை நாங்கள் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்க்கமான நிலையில் நான் தொடர்ந்தும் இருந்து வருபவன். இந்த விவகாரத்தில், வெளிநாடுகள் வேண்டுமானால் ஒரு மருத்துவிச்சியின் பங்கினை வகிக்க முடியும் என்பதையும் நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
எமது நாட்டுத் தலைவர்கள், மத வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக, தமிழ் நாட்டுக்கு அடிக்கடி போய் வருகிறார்களே அன்றி, உத்தியோகபூர்வமான விஜயங்களை, தமிழ்நாட்டுக்கு மேற்கொள்கின்ற நிலைமைகளும் காணப்படுவதில்லை.
எனவே, இந்த விவகாரத்தை பரிசீலித்து, இலங்கையுடன், தமிழ் நாட்டுக்கான நல்லுறவை வலுப்படுத்தக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். அத்துடன், தமிழ் நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தைப் பலப்படுத்த வேண்டும்.
தமிழ் நாட்டுடனான நட்புறவை வலுப்படுத்திக் கொள்வதானது, எமது நாட்டுக்கும், எமது நாட்டு மக்களுக்கும் பல்வேறு நன்மையான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன் என்று, டக்ளஸ் தேவனந்தா மேலும் கூறினார்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026