2024 மே 22, புதன்கிழமை

பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க விடுவதா?

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைதீவு, துணுக்காய், உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 50 வீட்டுத் திட்ட மக்கள் ஏற்கெனவே யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, தற்போது மீள்குடியேற்றப்பட்ட நிலையில் அடிப்படை வசதிகளின்றி பாதிக்கப்பட்டு வருவது தொடர்பில் உரிய அவதானமெடுத்து, அவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் டி. எம். சுவாமிநாதனிடம் நாடாளுமன்றத்தில் இன்று (05) வலியுறுத்தினார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா,

“கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், பெண் தலைத்துவத்தைக் கொண்ட குடும்பங்கள், மற்றும் விசேட தேவைகள் கொண்டவர்களில் 50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, இந்திய அரசின் உதவியுடனான வீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் 50 வீடுகள் அமைக்கப்பட்டு, முல்லைதீவு, துணுக்காய், உயிலங்குளம் பகுதியில் 2012ஆம் ஆண்டு குடியமர்த்தப்பட்டன. இக் குடியேற்றமானது 50 வீட்டுத் திட்டம் என அழைக்கப்படுகின்றது.

“இக்குடியேற்றத் திட்டத்தில், மின்சாரம், தண்ணீர், முன்பள்ளி, பாடசாலை போன்ற வசதிகளின்மை, பிரதான வீதி முதல் உள்ளக வீதிகள் வரை புனரமைப்பின்மை காரணமாக, இக்குடியேற்றத் திட்டத்தைக் கைவிட்டு மக்கள் வெளியேறுகின்ற நிலையே உருவாகியுள்ளதாகவும், அந்த வகையில் தற்போது 28 குடும்பங்கள் வெளியேறியுள்ளன எனவும் தெரிய வருகின்றது.

“நேரடி யுத்தப் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள எமது பகுதிகளில் வீடில்லாப் பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உள்ள நிலையில், கடினமான முயற்சியின் பயனாகக் கிடைத்து, பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் வீடுகள் அமைக்கப்பட்ட வரலாறு தங்களுக்குத் தெரியும் என எண்ணுகின்றேன்.

“எனவே, வீடுகள் இவ்வாறு கைவிடப்படும் நிலையானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

“உயிலங்குளம் 50 வீட்டுத் திட்டத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு சாதகமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும், இவ்வாறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், அக் குடியேற்றத்தைக் கைவிட்டுச் சென்ற குடும்பங்கள் மீளக் குடியேற வராத நிலை உறுதி செய்யப்பட்டால், காலியான வீடுகளை வேறு மாற்றுத்திறனாளிகளுக்கோ, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கோ வழங்கக் கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கவும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .