2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விருதை திருப்பி அளித்த வைரமுத்து

Editorial   / 2021 மே 30 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கவுள்ளதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

இவ் விடயம் குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தித்திருந்து. நானும் அதனை  நன்றி பாராட்டி வரவேற்றேன்.

ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குழுவையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.

அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை.

அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன். ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்.

தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும். இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி” இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

முந்திய செய்தி

பாலியல் புகாருக்கு உள்ளானவருக்கு விருதா?

மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முதல் முறையாக மலையாளி அல்லாத  இலக்கியவாதி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் வைரமுத்துவுக்கு இந்த விருது வழங்கப்பட்டதுக்கு தமிழில் பூ, மரியான் படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

ஓஎன்வி சார் நமது பெருமை, ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு அவர் பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் பார்வதி.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .