2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

கால்நடை இழப்புகளுக்கான இழப்பீடுகள் கிடைக்கவில்லை

Mayu   / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்ட 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இழப்பீடுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தபோது, பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை அவரிடம் நேரில் முறையிட்டனர்.

பாதிப்புகள் குறித்து மக்கள் தெரிவிக்கையில்:

சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட 'டிட்வா' புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததுடன், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அத்துடன், வாழ்வாதாரமாக இருந்த விவசாயச் செய்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பாரபட்சமான இழப்பீடு:

வீடுகளைத் துப்பரவு செய்வதற்காக அரசாங்கத்தினால் 25 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. எனினும், மன்னார் மாவட்டத்தின் ஏனைய கிராமங்களில் கால்நடை இழப்புகளுக்காக 10 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், தம்பனைக்குளம் மக்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். விவசாயப் பாதிப்புகளுக்கான கொடுப்பனவுகளும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதிகாரிகளின் நிலைப்பாடு:

கால்நடைகளின் அழிவு குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டபோது, "உரிய ஆவணங்கள் இல்லை" என்ற காரணத்தைக் கூறி இழப்பீடுகளை வழங்க மறுப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் இவ்விடயத்தில் தலையிட்டால் மட்டுமே தமக்கு நீதி கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

தமது வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இழந்த கால்நடைகள் மற்றும் விவசாயப் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடுகளைப் பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .