2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

முதலமைச்சரின் முதல் செல்பி

Mayu   / 2026 மே 10 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற கையோடு, மேடையிலேயே செல்பி வீடியோ எடுத்து முதல்வர் விஜய் தனது தனித்துவமான பாணியைப் பதிவு செய்துள்ளார். ஒரு மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவின் போது மேடையில் செல்பி எடுத்தது இதுவே முதல் முறையாகும்.

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில், பதவிப்பிரமாணம் எடுத்து முடித்தவுடன் முதலமைச்சர் விஜய் தனது அலைபேசியை எடுத்து அங்கிருந்தவர்களுடன் செல்பி எடுக்கத் தொடங்கினார்.

இந்தச் செல்பி வீடியோவில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மேடைக்கு எதிரே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இடம்பெற்றனர். முதல்வர் விஜய் தனது அலைபேசியைச் சுழலவிட்டு ஒட்டுமொத்த அரங்கத்தையும் அந்தச் செல்பி வீடியோவில் படம்பிடித்தார்.

திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களில் தனது ரசிகர்களுடன் செல்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்ட விஜய், அரசியலிலும் தனது முதல் நாளிலேயே அதே 'தளபதி' பாணியைத் தொடர்ந்தது அவரது ஆதரவாளர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

"என் நெஞ்சில் குடியிருக்கும்..." என்று தனது உரையைத் தொடங்கிய முதல்வர், இந்தச் செல்பி வீடியோவின் மூலம் மக்களுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இந்த 'முதல்வர் செல்பி' இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .