2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம்

Lenin Raj   / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கிலங்கையின் மிகப்பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான மட்டக்களப்பு, கல்லடி அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலயத்தின் பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம் இன்று திங்கட்கிழமை (06.04.2026) பக்தி பரவசத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிசேகத்தினை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. அதன் முக்கிய அங்கமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) காலை 06:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு மூலமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ கா.துறா.ஹரிச்சர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் கும்பாபிசேக கிரியைகள் நன்முறையில் நடாத்தப்பட்டன.

இன்று திங்கட்கிழமை அதிகாலை விநாயகர் வழிபாடுகளுடன் புண்ணியாவாசனம், வேத உபசாரங்கள் மற்றும் பிரதான கும்ப பூஜை என்பன ஆரம்பமாகின. விசேட யாக பூஜைகளைத் தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ கும்பங்கள் ஊர்வலமாகப் புறப்பட்டன.

வானத்தில் கருடன் வட்டமிட, பக்திப் பரவசத்திற்கு மத்தியில் ஆலய மூலஸ்தான மூர்த்திக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிசேகம் இனிதே நிறைவேறியது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வில் மட்டக்களப்பின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்தியைப் பெற்றுச் சென்றனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .