2025 ஜூன் 09, திங்கட்கிழமை

யானை பாதுகாப்பு வேலி அமைக்க அஷ்ரப் நகர மக்கள் எதிர்ப்பு.

Kogilavani   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யூ.எல்.மப்றூக்)

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்திலுள்ள தமது காணிகளினூடாக வனவிலங்குத் திணைக்களத்தினர் யானைப் பாதுகாப்பு வேலி அமைப்பதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று அப்பகுதி முஸ்லிம் மக்கள் அம்பாறை மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கரவிடம் உறுதிபடத் தெரிவித்தனர்.  

அஷ்ரப் நகரில், மக்களின் குடியிருப்புகளினூடாக வனவிலங்குத் திணைக்களத்தினர் பாதுகாப்பு வேலியினை அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக, அம்பாறை மாவட்டத்தின் கடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ - மேற்படி விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அவரது உத்தரவுக்கிணங்க மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர அஷ்ரப் நகருக்கு நேற்று வருகை தந்திருந்தபோதே, அப்பகுதி மக்கள் மேற்கண்டவாறு கூறினர்.

அஷ்ரப் நகர் முதலாம் பிரிவில் தாம் நீண்டகாலமாக வசித்து வருவதாகவும்,  தமது நிலத்தை யானைப் பாதுகாப்பு வேலி என்கிற போர்வையில் வனவிலங்குத் திணைக்களத்தினர் அபகரிப்பதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அங்கிருந்த மக்கள் மாவட்ட செயலாளரிடம் தெரிவித்தனர்.

இதன்போது, மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர கூறுகையில், அஷ்ரப் நகர் முதலாம் பிரிவிலுள்ள மக்கள் தங்களுடைய நிலத்துக்குரிய அனுமதிப்பத்திரத்தை 14 நாட்களுக்குள் (27 ஆம் திகதிக்குள்) அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் கொடுத்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு தவறும் நபர்களுக்கெதிராக அரச காணிகளில் அத்துமீறிக் குடியேறிய குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதேவேளை, இப்பகுதி முஸ்லிம் மக்களின் விவசாயக் காணிகளுக்குச் செல்வதற்கான பாதையினை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருக்கும் தீகவாபி எல்லையினையும், யானைப் பாதுகாப்பு வேலியினையும் வீதியை விட்டு சற்று நகர்த்தி தருமாறும், குறித்த பாதையைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறும் மாவட்ட செயலாளரிடம் அங்கிருந்த மக்கள் கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

அதற்கு மாவட்ட செயலாளர் பதிலளிக்கையில், இவ்விடயம் தொடர்பாக தீகவாபி விகாராதிபதியுடன் சம்பந்தப்பட்ட விவசாயிகள் பேசி தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில்,அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் நசீர், அம்பாறை மாவட்ட வனத்துறை அதிகாரி ஜி. லலித் கமகே மற்றும் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல உள்ளிட்ட பலர் சமூகமளித்திருந்தனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .