2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

ஐந்தாம் கொலனி கிராம மக்களின் வேண்டுகோள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 23 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஐந்தாம் கொலனி கிராமத்தில் குடிநீர், போக்குவரத்து, மற்றும் சுகாதார வசதிகளின்றி மக்கள் மிக நீண்ட காலமாக பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருவதாகவும், இப்பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகள் தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டுமென்றும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஐந்தாம் கொலனி கிராமம் 1952ஆம் ஆண்டு கல்லோயாத் திட்டத்தின் கீழ் ஐந்தாவதாக உருவாக்கப்பட்டதாகும்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாளம்பைக்கேணி முதலாம், ஐந்தாம் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஐந்தாம் கொலனி கிராமத்தில் சுமார்  இரண்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

இந்தக் கிராமத்தில் நீரைப் பெறுவதென்பது மிகவும் சிரமானதொரு விடயமாகும். கோடை காலங்களில் இங்குள்ள பொதுக் கிணறு உள்ளிட்ட ஒரு சில கிணறுகளில் மட்டுமே ஓரளவு நீரைப் பெற முடிகிறது. ஏனைய கிணறுகள் வற்றி விடுகின்றன. ஆனாலும், இந்தக் கிணறுகள் பலவற்றிலுள்ள நீரில் உப்புத் தன்மை உள்ளதால் அவற்றினையும் குடிநீராகப் பயன்படுத்த முடிவதில்லை.

இதேவேளை, இங்கு மின்சார வசதியுள்ளபோதும் எந்தவொரு இடத்திலும் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லையெனவும், இதனால் இரவு வேளைகளில் பாம்புகளின் அச்சுறுத்தல் உள்ள இக்கிராமத்தின் வீதிகளால் பயணம் செய்வதற்கு பயமாக உள்ளது எனவும் இங்குள்ள மக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.

மேலும், வைத்தியசாலை வசதிகளும் இந்தக் கிராமத்தில் இல்லை. இங்கிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கல்முனை வைத்தியசாலைக்கே ஐந்தாம் கொலனி மக்கள் தமது வைத்தியத் தேவைகளுக்காகச் சென்று வருகின்றனர்.

அதேவேளை, ஐந்தாம் கொலனிக் கிராமத்துக்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை எனவும் மக்கள் கூறுகின்றார்கள். தமது பயணத் தேவைக்காக பஸ் ஒன்றைப் பிடிப்பதற்கு இங்குள்ள மக்கள் சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் நடந்து செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த கிராம மக்களின் பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் வெகு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என அம்மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .