2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மாநகரசபைக்கு முரணாகவே கணக்காளர் செயற்படுகின்றார்: மேயர் மசூர் மௌலானா

A.P.Mathan   / 2010 நவம்பர் 28 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை மாநகரசபை கணக்காளரின் நடவடிக்கைகள் மாநகரசபைக்கும் மேயருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கும் குந்தகமாக அமைந்து விடக்கூடாது எனும் நோக்கிலேயே – குறித்த கணக்காளரின் அலுவலக அறையை பூட்டி 'சீல்' வைப்பதற்குத் தீர்மானித்ததாக கல்முனை மாநகரசபையின் மேயர் எஸ்.இஸட்.எம்.மசூர் மௌலானா தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமையன்று, கல்முனை மாநகரசபை கணக்காளர் ஏ.ஆர்.நஸீமுல் ஹக்கின்  அலுவலகத்தை மேயர் மசூர் மௌலானா தலைமையிலான குழுவினர் பூட்டி 'சீல்' வைத்தமை தொடர்பில் மேயரிம் கேட்டபோதே அவர் மேற்கண்ட பதிலைக் கூறினார்.

இவ்விடயம் தொடர்வில் மசூர் மௌலான மேலும் தெரிவிக்கையில்ள:

கல்முனை மாநகரசபையினால் இறைச்சிக் கடைகள் கடந்த வியாழக்கிழமை பகிரங்க ஏலத்தில் விடப்படவிருந்தது. இதன்போது கணக்காளர் வருகைதர வேண்டும் என்று அவருக்கு எழுத்து மூலம் நான் அறிவித்திருந்தேன். ஆனால், அவர் அலுவலகத்துக்கு வந்திருந்தபோதும் ஏலம்விடும் நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை. கடைசில் இரு ஊழியர்களை அனுப்பி அவரை அழைத்து வருமாறு கூறினேன். அதன்போதும் அவர் வரவில்லை.

அதுமட்டுமல்ல, சிலவேளைகளில் மாநகரசபையின் நிர்வாகத்துக்குக் கட்டுப்படாமல் தனது விருப்பத்துக்கேற்றால்போல் கணக்காளர் நடந்துகொள்வதாக மாநகரசபை அங்கத்தவர்களிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சில காலங்களுக்கு முன்னர்கூட, ஒரு தடவை கணக்காளரை நாம் அழைத்தபோது, அவர் வராதமையினால் ஏற்பட்ட பிரச்சினையொன்றின் காரணமாக, பொலிஸ் நிலையம்வரை சென்று எங்களுக்கெதிராக அவர் முறைப்பாடு செய்திருந்தார்.

அதேவேளை வியாழக்கிழமை 25ஆம் திகதி இங்குள்ள உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கும் நாளாகும். ஆனால், அதை அவர் செய்யவில்லை. காசோலையில் கூட ஒப்பமிடவில்லை.
 
இந்த மாநகரசபையின் மேயராகிய நானும், இங்குள்ள ஆணையாளரும் கணக்காளரைக் கூட்பிட்டு அனுப்பியும் கூட, அவர் வரத் தவறிவிட்டார்.

சிலவேளைகளில், அவர் திரும்ப வந்து – அவரின் அறையிலுள்ள பொருட்கள் எதையாவது கொண்டு சென்று விடுவாரேயானால் அதற்குப் பொறுப்புதாரி நான்தான்! அதனால், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதற்காகவே கணக்காளரின் அறையைப் பூட்டி வைத்துள்ளோம்.

இது நிரந்தரமானதொரு முடிவல்ல. இது தொடர்பில் மேலதிகாரிகளுக்கு நான் அறிவித்துள்ளேன். மேலும் கணக்காளரோடு பேசி நல்லதொரு முடிவை எடுக்கும்வரையில் மட்டுமே இந்த அறையினைப் பூட்டி வைத்துள்ளோம்.

கணக்காளர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என்றோ, கடமையைச் செய்யக்கூடாது என்றோ நாம் ஒருபோதும் கூறவில்லை.

மாநகரசபைக்கு பக்கபலமாக இருப்பதை விடவும், மாநகரசபைக்கு முரணாகவே குறித்த கணக்காளர் செயற்படுகின்றார்.

இவரின் நடவடிக்கை மாநகரசபைக்கோ, மேயருடைய அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கோ குந்தகத்தை ஏற்படுத்தக்கூடாது எனும் நல்ல நோக்கிலேயே இவ்வாறானதொரு முடிவினை நாம் எடுத்துள்ளோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .